Sunday, December 31, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
------------------------------------

பழையன கழிதலும் புதியன புகுதலும்
எண்ணிப் பார்க்க இன்னொரு வாய்ப்பு!
சொல்லில் பார்த்தது போதும்
செயலிலும் பார்க்க முயலலாமே!

அல்லும்பகலும் தெருக்கல்லாய்
நாம் இருந்தது நேற்றோடு போகட்டும்!
இன்றிலிருந்து விழிக்க முயலுவோம்!
இமைக்க மறுக்கிறோமா நாம்
விழிக்க மறுப்பது சரியா?

மெத்தப் படித்திருக்கிறோம்
அனைத்தையும் அறிந்திருக்கிறோமென்றே
எத்தனை நாட்கள்தாம்
ஏமாந்து கொண்டும் நம்மையே
ஏமாற்றிக் கொண்டும் இருப்பது?

ஏற்றத்தாழ்வுகள் அழிக்க முடியுமா?
துன்பங்கள் போக்க முடியுமா?
உலகை மாற்ற முடியுமா?
கேள்விகளின் இயலாமைகளை
இன்றிலிருந்து புறந்தள்ளுவோம்!
அவற்றின் நியாயங்களை அல்ல!

எண்ணத்தின் பாதையில்
நம்மைப் போல்
அடுத்தவரையும் நடத்திடுவோம்
சரிநிகர் சமானமாய்
எண்ணிப் பார்க்க முயன்றிடுவோம்!

நம்மை நம் சிந்தனையை
மாற்றிப் பார்ப்போம்
உலகம் மாறாமலா போய்விடும்!!
நம் எண்ணத்தினூடாய்

நல்லுலகாய் மாற்றத் துவங்குவோம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நம்பி.பா.



Wednesday, November 29, 2006

நல்லார் ஒருவர்-1 www.charactercounts.org

வள்ளுவன் வாக்கு:-
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

உண்மையோ பொய்யோ, ஒழுக்கத்திற்கும் அறநெறிக்கும் பெயர் போன
நாடு நம் தாயகம் என்று என்னால் அடிக்கடி சொல்லிக் கொள்ளாமல்
இருக்க முடியவில்லை. இங்கே ஒழுக்கம் என்பது மாறிலி (constant)
அல்ல, ஒப்புநோக்குதலின் அடிப்படையில் தான்! சக மனிதர்களை
மதிக்கத் தெரிவதும் அவர்களின் நல்லுணர்வை புரிந்துகொள்ளுதலுமே
இன்றைய உலகின் பேரொழுக்கங்களாகும்.

வாழ்வியல் ஒழுக்கநெறிக்கு (ETHICS) சம காலத்தில் வாழ்பவர்களில்
பலரை நாம் எடுத்துக்காட்டாய் காட்டலாம், நம் நாட்டில் மட்டுமல்ல,
பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையிலுள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும்
கூட எடுத்துக் காட்டலாம். அதில் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கநெறி
கற்றுக் கொடுப்பதையே தன் முழு முதல் கடமையாக வைத்திருக்கும்
அமெரிக்காவில் வசிக்கும் லாஸ்ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த
"மைக்கேல் ஜோசப்சன்" (Micheal Josephson) என்பவர் இன்றைய
வழிகாட்டிகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை நிச்சயம் பிடிப்பார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தனது முழு நேர தொழிலாக
ஒழுக்கத்தை மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும்

கற்றுக் கொடுக்கிறார் திருவாளர் ஜோசப்சன் அவர்கள்.
ஜோசப்சன் ஒழுக்கநெறி நிறுவனம் (Josephson Institute for Ethics) என்ற
இலாபம்-சாரா (non-profit) நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.
பிள்ளைகள் வளரும் பருவத்திலே அவர்களுக்கு ஒழுக்கத்தை

கற்றுக் கொடுத்து, நல்ல குடிமகன்களாய் மாற்ற வழிகாட்டும் இந்த
பெருஞ் செயல், உலகத்தை ஒரே நாளில் மாற்றியமைக்காது
என்றாலும், நாளைய சமுதாயத்தை ஒரு நல்லதொரு சமுதாயமாக

உருவாக்குவதற்கான ஒரு நல்ல செயல் என்பதில் சிறிதும்
சந்தேகம் இல்லை. இவரின் நிறுவனம் இன மற்றும் மத
சார்பு இல்லாத ஒரு நிலையில்தான் ஒழுக்கத்தை கற்றுக்
கொடுக்கின்றது.

அவரின் வலைத்தளம் :-
http://www.charactercounts.org/
கீழ்வரும் ஆறு அடிப்படை கொள்கைகளைத்தான் அவர்
மாணவர்களுக்கு முக்கியமாகக் கற்றுக் கொடுக்கிறார்.
1) நம்பிக்கைக்கு உரியவராய் இருத்தல் (Trustworthiness)
2) பிறரிடத்தில் மரியாதை (Respect)
3) பொறுப்புணர்ச்சி (Responsibility)
4) கண்ணியமாய் இருத்தல் (Fairness)
5) பிறரிடத்தில் கனிவு (Caring)
6) நல்ல குடிமகனாய் இருத்தல் (Citizenship)
ஆறு கொள்கைகள்:- http://www.charactercounts.org/defsix.htm

இது தவிர Work Ethics (வேலையிட ஒழுக்கம்) குறித்தும்
வகுப்புகளை நடத்துகிறார். தினம் ஒரு முறை உள்ளூர்
வானொலியில் பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசுகிறார்.
இந்த சுட்டியில் நுழைக :- http://www.charactercounts.org/knxtoc.htm

பணம் சம்பாதிக்க பல நூறு வழிகளிருந்தும், அதையெல்லாம் விடுத்து,
நாளைய சமூகத்திற்கு வழிகாட்டியாக, நமக்கெல்லாம் ஒரு
முன்னுதாரணமாய் இருக்கும் மைக்கேல் ஜோசப்சன் அவர்களுக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

தொடர்புடைய வலைத் தளங்கள்:-
முக்கிய வலைப்பக்கம் :-
http://www.charactercounts.org/
ஆறு கொள்கைகள் :- http://www.charactercounts.org/defsix.htm
வானொலி பேச்சு :- http://www.charactercounts.org/knxtoc.htm

அன்புடன்,

நம்பி.பா.

பிகு. இந்த பதிவு http://nallathunadakattum.blogspot.com/ பதிவில் மறுபதியப்பட்டுள்ளது

Tuesday, November 21, 2006

தனிமையும் உறவும்!

சிந்தனை என் தோழன்

தனிமை அதற்குப் பாதை

தனிமை எனக்கு இனிமை சில நேரங்களில்.

கேள்விகூடத் தோன்றுமெனக்கு

உறவு வந்தால் நாளை

என் செய்வேன் என் தனிமைக்கு?


வாழ்க்கையெனும் நாடகத்தில்

தனிமை கூட இரயில் சினேகமா?


உறவு கொணர்வது

வாழ்க்கைக்கு புதையல்தான்

அது தனிமைக்கு சுத்தியலாகலாமா?

எனக்கு மட்டுமல்ல உனக்கும்தான்!


புதிதாய் ஒரு சிந்தனை

வார விடுமுறைபோல்

மாதத்தில் சில நாள்

தனித்தனியாய் தனிமைக்கு

ஏன் அழைப்பு விடக்கூடாது?


தனிமை நம்

முழுமைக்கு வழிகாட்டியாயிற்றே!

அமைதிக்கு உற்ற தோழமையாயிற்றே!

புதிதாய்த் தான் வாழ்ந்து பார்ப்போமே!


உறவுக்கு தனிமை

உண்மைத் தோழனென்பதை

உணர முயல்வோம் நாம்!


வருவோம் நாம் உறவோடு

தனிமையையும் மகிழ்வையும்

காண்போம் நாம் வாழ்வாய்!

என்ன சொல்கிறாய் என் உறவே?

அன்புடன்,

நம்பி.பா.

பிகு. திருமணத்திற்கு முன்பிருந்த வீரத்தால் என்றோ எழுதியது.

நீ யாருக்குத் தோழி!

நிலவெரிந்த இரவுகள்
நித்தம் என்
நெருப்புக்குத் துணையாயின.

மனம் நிறைந்த
கணங்களை எண்ணுங்கால்
நான் மறுபடி உடைகிறேன்.

நீயென்ன
நெருப்புக்குத் தோழியா
இல்லையென்
நெஞ்சுக்குத் தோழியா?


அன்புடன்,
நம்பி.பா.




மை(யல்) விழி

அஞ்ஞனம் கொண்ட விழியிரண்டும்
நெஞ்சினில் பாயுது
நெருப்புக் கணைகளாய்!

அஞ்சிடும் என் நெஞ்சு
காதலின் வீச்சு கண்டு!

வெஞ்சினம் கரையும்
ஒரு நொடிப் பார்வையில்
என் மனமோ உருகுது
அனலிடை மெழுகாய்!

காப்பாற்ற வரச்சொன்னால்
கரைக்க வருகிறாயே!
உன்னுள்ளே கரைத்துவிடு!
உயிருள்ளே சேர்த்துவிடு!

அன்புடன்,

நம்பி.பா.


--ஜூலை 18 2000-இல் எழுதியது.

Friday, November 17, 2006

கனவும் காட்சியும்!!!

வள்ளுவன் வாக்கு!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்;
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்;

கனவும் காட்சியும்!!!

உணவு மட்டுமே இவர்களுக்கு உணவாய் இருக்கின்றது,
கனவுதான் உணவு என்பதே இவர்களுக்கு தெரியவில்லை!
(ஜேஜே சில குறிப்புகளிலிருந்து)
அதென்னவோ இன்றைக்கும் நிஜமாய்த்தான் இருக்கிறது.

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்!
கனவுகள் தான் நிஜத்தின் பாதை,
கனவுகள் தானே நாளை என்பதையே
நம் கண்களுக்கு காட்டுகின்றன.

"கண்ட கனவு பலித்தால்" என்பதுதானே பல நேரங்களில்
நாளையே நமக்கு துவக்கி வைக்கின்றது! மாற்றியும் வைக்கின்றது.

விடியலில் உறக்கத்தை வழியனுப்பும் கனவு
நம் மனதை நிறைக்கா நாளேது?

உறக்கத்தின் கனவுகளில் சில உலகத்திற்கே வழி காட்டியிருக்கின்றன. உறக்கத்திற்கு மட்டுமல்ல, விழிப்புக்கும் கூடத்தான் கனவு சொந்தம்.

விழிப்பின் கனவு சிறப்பான கனவு,
சிந்தையின் உச்சத்தின் வந்த கனவு அது!
செயலின் உச்சத்தில் வரும் கனவும் அதுவே!

விழிப்பின் கனவு வேறெதுவுமில்லை,
முனைப்பின் கனவு அது,
தியானத்தின் கனவு அது,
போதியினடியில் புத்தன் கண்ட கனவு அது.

நாளையின் பாதையை நமக்கு மட்டுமல்ல
உலகுக்கே மாற்றியமைக்கும் சக்தி கொண்டது அது .

கனவை காட்சியாக்கும் முயற்சியில்தான் உலகே இயங்கிக்
கொண்டிருக்கின்றது, மறுக்க முடியாத உண்மை இதுதானே!!

நமது கனவென்ன?
எல்லோருக்கும் நல்லன எல்லாம் கிட்ட வேண்டும் என்பதுதானே!

நம் கனவும் காட்சியாகட்டும்,
நம் கனவையும் அயரா உழைப்பையும் அதற்கே விலையாய்
இன்றே தருவோம்!!

நம்புங்கள் நாட்கள் எல்லாம் பொய்,
இன்றின் கனவுகளும் நாளையின் காட்சியும் மட்டுமே உண்மை!

கனவு காணுவோம்! கனவு காணுவோம்!!

அன்புடன்,
நம்பி.பா.

பி.கு. இந்த பதிவு http://nallathunadakattum.blogspot.com/ பதிவில்
மறுபதியப்பட்டுள்ளது.

Wednesday, November 15, 2006

கருத்து கந்தசாமியும் மாறுபாடு மன்னார்சாமியும்!

கருத்து கந்தசாமியும் மாறுபாடு மன்னார்சாமியும்!

கந்தசாமியும் மன்னார்சாமியும் ரொம்ப காலத்துக்கு முன்னால பொறந்தவங்க,
அவங்க எப்ப, எங்க பொறந்தாங்கன்னு இதுவரைக்கும் யாராலயும்
கண்டுபுடிக்க முடியல. ரெண்டு பேரும் ஒரு தாய் வயித்து பிள்ளையா தான்
இருந்திருக்கணும்னு நான் நினைக்கிறேன், அவங்க ரெண்டு பேரும்
ஒண்ணாவே தான் பொறந்திருக்கணும்.

எப்பப் பாத்தாலும் எங்க போனாலும், அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாவேதான் போவாங்க, ஒருத்தர் என்ன சொன்னாலும் அடுத்தவர்
அதுக்கு எதிர்ப்பாவேதான் சொல்லுவாங்க. பிரச்சினை என்னன்னா அதுல
யாரு எப்ப சரின்னு யாராலயும் சொல்ல முடியாது! இடத்துக்கேத்த மாதிரியும்
நேரத்துக்கேத்த மாதிரியும் நிலையை மாத்திப்பாங்க.

அய்யா, முட்டையிலருந்து தான் கோழி வருதுன்னு கந்தசாமி
சொன்னாருன்னா, இல்லய்யா கோழிலருந்துதான் முட்டை வருதுன்னு
மன்னார்சாமி சொல்லுவார். இந்த கேள்விக்கு எல்லாராலயும் சுலபமா பதில்
சொல்ல முடியாது, இவங்க கிட்ட மாட்டிட்டு கிட்டத்தட்ட எல்லாருமே
முழிக்கறாங்க. மாட்டிட்டு முழிக்காதவங்க எல்லாம் வாழ்க்கையில
விழிக்காதவங்களாதான் இருக்காங்கன்னு கந்தசாமி சொல்றாரு, ஏன்னா
யோசிக்கவே மாட்டாங்கன்னும் அவர் சொல்றாரு. ஆனா அவங்கல்லாம்
பொழைக்கத் தெரிஞ்சவங்கன்னு மன்னார்சாமி சொல்றாரு, கேள்வி
கேட்டுட்டு நேரத்தை வீணடிக்க மாட்டாங்கன்றாரு. ஒரே கொழப்பம்தான்
கூடுது!

ரொம்ப படிச்சு ஒலகத்தை நல்லாவே புரிஞ்சுகிட்டவங்களப் பார்த்தா, சில நேரம்
கந்தசாமி வேஷம் போடறாங்க, சில நேரம் மன்னார்சாமி வேஷம் போடறாங்க,
என்னைப் போல ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.

புத்தனை பார்த்தா, அவரு முதல்ல மன்னார்சாமி வேஷம் போட்டுட்டு, பின்னாலே
கந்தசாமியா மாறிட்டுருக்காரு. சாக்ரடீசா இருந்தாலும், அரிஸ்டாட்டிலா இருந்ததாலும்
சரி, அட, இதே கதைதான் மத்த பெரிய மனுஷங்களோட வாழ்க்கையிலயும் நடந்திருக்கு!

எனக்கென்னவே இதெல்லாம் ஒத்து வரவே மாட்டேங்குது, கந்தசாமி வேஷம்
போடறதுக்கு ரொம்ப தைரியம் வேணும் போலருக்கு! மன்னார்சாமி வேஷம்தான்
ரொம்ப ஈஸியா இருக்கா மாதிரியிருக்கு, ஆனா மன்னார்சாமி வேஷம் போட்டா
சுத்தி இருக்கறவங்க எல்லாம் ஒதைக்கத்தான் வர்றாங்க.

மன்னார்சாமி மடம்னு ஏதாவது இருந்தா தேடித்தான் போகணும் போலருக்கு!

இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கறேன்!

அன்புடன்,
நம்பி. பா.

Saturday, November 11, 2006

பாரதி பாரதிதான்!

எத்தனை முறை படித்தாலும்
அதே வீச்சு, அதே கூர்மை!!

எத்தனை முறை,
எத்தனை பேர்,
எத்தனை விதம் சொன்னாலும்
பாரதி பாரதிதான்!

தமிழ் வாழப் பிறந்தவன் பாரதி
தான் வாழாமல் வாழ்ந்தவனை
அன்று கைவிட்டோம்!
இன்றவன் வார்த்தைகள்
நம்மை வாழ வைக்கின்றன!

எல்லோருக்கும் நல்லன
எல்லாம் கிட்டிட எண்ணிய
அவனை என்றும் மறவோம்!

ஒவ்வொரு நாளிலும்
பாரதியை நாம்
நாளின் முதல் மூச்சாய் கொள்வோம்!



பாரதியின் ஒரு சிறு கவிதை!

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!

முதல் பதிவு முயற்சி

வைகறை வானம்!

முதற்கண் இணையத்தின்பால்
தமிழை உலவவிட்ட
தமிழார்வலர் அனைவருக்கும்
என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!
உங்களின் முயற்சி
இன்று தமிழின் வளர்ச்சி!


வைகறை வானத்திற்கு
என் அறிமுகம் பெரிதல்ல!
எனக்கு வைகறை வானம் பெரிது!

கதிருக்கு கட்டியம் கூறி
இருளை வழியனுப்புவது
வைகறை வானம்!

விடியலின் பாதையை
உறுதியாய் கண்ணுக்கு காட்டுவது
வைகறை வானம்!

வானத்தின் வண்ணக்கோலங்களில்
என் எண்ணந்தனை
பெரிதாய் கவர்ந்தது
வைகறை வானம்!

எண்ணத்தின் போக்கிலே
என்னென்ன தோன்றுகிறதோ
எழுதப் போகிறேன் இந்தப் பக்கங்களில்!

அன்புடன்
நம்பி.பா.