
காதலின் நீண்ட விழியசைப்பில்
நேற்றின் காத்திருப்புக்கள்
காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.
எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்
இதயம் நிரப்பியென்
சிந்தனையின் வாசம் மொய்த்தன.
காட்சியின் பிழையில்
நிலவொன்று உலகின் ஓளியாய்
நிகழ்வுகளில் வந்து நின்றது.
புன்னகையின் இதழ் விரிப்புக்கள்
பாதையின் நெருஞ்சிகளை
நெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.
பதின்மத்தின் பசுமை நினைவுபோல்
ஏக்கத்தின் பசிகளுக்கும் என்
இயக்கத்துக்கும் காதல் துணையானது.
அன்பின் ஒரு வடிவம்தான் காதல்
ஆனால்
அதன் வீச்சோ ஆழமானது.
கவிதையின் ஒரு முகம்தான் காதல்
ஆனால்
அதன் பொருளோ என்றும் புதிதானது.
மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்.
எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!