Sunday, November 30, 2008

புயல் நிஷா, மின்வெட்டுகள், பழுதான தொலைபேசி இணைப்பு மற்றும் நட்சத்திர வாரம்.

அவசர சொந்த வேலை காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் அமேரிக்காவிலிருந்து, சென்னைக்கு(திருவள்ளூர்) வர நேர்ந்தது. இங்கு புயல் நிஷாவின் வருகையால், கடந்த ஒரு வாரமாகவே எட்டிப் பார்க்கத் துவங்கிய மழை, சென்ற ஞாயிறன்று வலுக்கத் தொடங்கியது. மேலும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள சிற்றூர் என்பதால் எப்போதும் சிலமுறை எட்டிப் பார்த்திருந்த மின்வெட்டு தனது வரவையும் இருப்பின் நீளத்தையும் கூட்டத் துவங்கியது. அதுவரை நன்றாக வேலை செய்திருந்த வீட்டுத் தொலைபேசியும், இணைய இணைப்பும் சென்ற சனிக்கிழமை முதல் தகராறு செய்யவும் ஆரம்பித்தன.

நவம்பர் 24 முதல் 30 வரையிலான வாரம் தமிழ்மணம் நட்சத்திரப் பதிப்பிற்கான வாரமென்பது கொஞ்சம் தவிப்பையும் கூட்டியது. இது தவிர்த்து, நட்சத்திர வாரம் துவங்கும் திங்களன்று, 'சுடர்விழி' என்ற பதிவரின் பதிவு தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டதும் கேள்விகளைக் கூட்டியது. தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை மாற்றிய பிறகு அறிமுகப் பதிவையும் பிற பதிவுகளையும் பதிக்க ஆரம்பித்தேன். மாறிமாறி வந்த மின்வெட்டுக்களும், விட்டுவிட்டு வேலை செய்த தொலைபேசி இணைப்புக்கும் நடுவில் திங்களன்றும் செவ்வாயன்றும் பதிக்க முயன்றது இன்னமும் மறக்கவில்லை.

செவ்வாயன்று, மிகக் குறைந்த அளவு நேரமே வேலை செய்த இணைய இணைப்பு, புதனன்று காலையில் முழுதும் படுத்துவிட்டது. கரையைக் கடக்க நிஷா முயன்று கொண்டிருந்ததால் எங்கும் பெரு மழை. அந்த மழையிலும், எனது மாமாவை, அருகிலுள்ள தொலைதொடர்புத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி, பொறியாளரைத் தேடிப் பிடித்து வீட்டுக்கு வரவழைத்து, கம்பத்திலிருந்து வீட்டிற்கு வரும் இணைப்பைச் சரிசெய்யச் சொன்னது ஒரு பெரிய கதை.

எழுத எண்ணி எழுதாமல் விட்ட சில தலைப்புகள், நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்,
1) கிட்மோ (குவண்டனமோ) என்னும் கொடுஞ்சிறை
2) வீடற்றவர்களின் தலைநகரம் அல்லது லாஸ் ஏஞ்சலஸ் எனவும் சொல்லலாம்
3) FDA-வின் உணவுப் பிரமிடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
4) நீங்கள் உடற்பயிற்சியிடமிருந்து தப்பிக்க முடியாது

இந்த மின்வெட்டு மற்றும் தொலைபேசி இணைப்புப் பழுதுகள் எனக்கு இன்னொரு விதமாக உதவத் துவங்கியது. பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பிறகு, பேனாவைக் கையிலெடுத்து எழுதும் பழக்கத்தை மறுபடியும் தூண்டியது, கட்டாயமாக்கியது. கணிணியிலேயே எழுத்துப் பலகையைத் தட்டிக் கொண்டும் யோசித்துக் கொண்டுமிருந்ததை விட, வெறும் தாளில் எழுதுவதிலுள்ள வசதியை இந்த நிகழ்வுகள் எனக்குச் சுவைக்கத் தந்தன. நிற்க.

எப்போதாவது ஒரு முறை வலையில் பதிக்கும் என்னை, மேலும் மேலும் படிக்க, 
எழுதத் தூண்டியது இந்த நட்சத்திர வாரம். 

மேலும், என் எண்ணத்தில் உள்ளதை நான் எழுத்தில் பதிப்பித்ததை பதிவுகளுக்கு வந்து படித்த அனைவருக்கும், நட்சத்திர பதிவராய் வாய்ப்பளித்த தமிழ் மண நட்சத்திர பதிவுகள் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள். 
வணக்கம்.