Sunday, March 23, 2008

இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்



பகத் சிங்
பிறப்பு:- செப்டம்பர் 27, 1907(லயல்புர், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)
இறப்பு:- மார்ச் 23, 1931 ( லாகூர் சிறையில் தூக்கில், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)

தூக்கிலடப்பட்டதன் காரணம்:- இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தது மற்றும், தில்லி நாடாளுமன்ற அவையில் ஒரு சிறு குண்டெறிந்துப் பின் காவலர்கள் கைது செய்யும்வரையில் பார்வையாளர் அரங்கிலேயே நின்றிருந்து, அவையில் நிறைவேற்றவிருந்த "இந்திய பாதுகாப்புச்" சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயன்றது.

இருபத்து நான்காம் வயதிலேயே தனது உயிரை நாட்டுக்காகவும் கொள்கைக்காகவும்
கொடுத்த பகத் சிங், இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் (HSRA Hindustan Socialist Republic Association) எனும், இரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் இந்தியாவில் ஏற்பட்டிருந்த புரட்சிக் குழுவின் தீவிர உறுப்பினர். வர்க்க பேதங்களையும், இறை நம்பிக்கை, சாதி மற்றும் அதன் தொடர்பான மூட நம்பிக்கைகளையும் அவர் முழுமையாய் எதிர்த்தார்.

21 வயதில் எடுக்கப்பட்ட பகத் சிங்கின் படம்:-


மார்ச் 23, 1931 அன்று காலை 7 மணியளவில்(சரியாக 77 ஆண்டுகளுக்கு முன்பு), பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூர் சிறையில், தோழர்கள் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய இருவருடனும் தூக்கிலிப்பட்ட பகத் சிங்,பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போரிலும் இந்திய வரலாற்றிலும் ஒரு முக்கியப் பக்கம், போராட்டம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

தனது கடைசி கடிதத்தில் பகத் சிங் எழுதியது, "போரிட்டுக் கொண்டிருக்கும்போது என்னைக் கைது செய்துள்ளனர், எனக்கு தூக்கு தேவையில்லை, பீரங்கியின் வாயில் வைத்து என்னைச் சிதறச் செய்யுங்கள்!", மரணத்திற்கு அஞ்சாமல் எழுதப்பட்ட வரிகள்!

கொள்கைப் பிடிப்பினை மாற்றிக் கொள்ளாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல் விடுதலையை வாழச் சொல்லிவிட்டு (இன்குலாப் ஜிந்தாபாத்) தன்னுயிரை தேச விடுதலைக்காக தந்த பகத் சிங்கின் வாழ்க்கை தலைமுறைகள் தாண்டியும் துணிவிற்கு உதாரணமாய் நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு;

பகத் சிங் சிறையிலிருந்தபோது எடுத்த படம்:-







பகத் சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்" - என்ற கடிதம் அவருடைய இறை மறுப்புக் கொள்கையை விளக்கிச் சொல்லும். மேலும், பகத் சிங்கின் நாட்குறிப்புப் புத்தகத்தில், மார்க்சியக் கொள்கை நம்பிக்கைகளும், இறை மறுப்பைப் பற்றிய குறிப்புக்களும் பெரிதும் இடம் பெற்றிருந்தன.

தூக்கிலிட்ட நேரத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டவாறே இறந்தவன் பகத் சிங்!

பகத் சிங்கின் தூக்கு குறித்த காந்தியின் வரிகளில்,
"பகத் சிங் வாழ விருப்பப்படவில்லை, (பிரிட்டிஷாரிடம்) மன்னிப்பு கோர மறுத்தும், வேண்டுகோள் விடக் கூடவும் தயாராக இல்லை. பகத் சிங் அறநெறியை பின்பற்றவில்லை, அதே நேரத்தில் வன்முறையை தழுவவும் தயாராகவில்லை!"

பகத் சிங்கின் மரணத்தை தடுக்கும் முயற்சியில் காந்தி தீவிரமாக ஈடுபடவில்லை என்ற கருத்து இன்றுவரை பெரிதாய் இருக்கிறது!

மார்ச் 29, 1931 குடியரசு வார இதழில், பெரியார் எழுதியது,

"பகத் சிங்கை தூக்கிலிட்ட நிகழ்வுக்கு வருந்தாதவர் எவருமில்லை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செயலை கண்டிக்காதவரும் எவருமில்லை"

"பகத் சிங்கின் சிந்தனையும் கொள்கைகளும் எந்த சட்டத்தின் நோக்கிலும் குற்றம் இல்லை, அப்படியே சட்டத்திற்கு எதிரானதெனக் கூறினாலும், அந்தக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் யாருக்கும் எந்த தீங்கையும், பொதுமக்களுக்கு எந்த விதமான இழப்பையும் ஏற்படுத்தாத பகத் சிங்கின் கொள்கையை செயலுக்கு கொணர நாம் உழைப்போம்!"



-----------------------------------------
பகத் சிங் குறித்து மேலும் விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh
பெரியார் கண்ணோட்டம்,இந்து நாளேட்டில் வந்திருந்த தலையங்கம்
http://www.hindu.com/2008/03/22/stories/2008032251531100.htm
பகத் சிங் மரணம் குறித்த காந்தியின் கடிதம்
http://www.kamat.com/mmgandhi/onbhagatsingh.htm
நான் ஏன் நாத்திகனானேன் - பகத் சிங்கின் கடிதம்
http://www.boloji.com/spirituality/051.htm
மேலும், http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm