Thursday, September 11, 2008

விதியும் வாழ்வின் விதையும்

இந்த பதிவுத்தளத்தின் தற்போதைய பதிவைக காண இங்கே செல்லவும் http://vaigaraivaanam.blogspot.com

பெரிதினும் பெரிது வேண்டி
சிறிதினை பெரிது முழுங்குதல்
விதியென்பதா? பரிணாமம் என்பதா?
இறை வகுத்த பாதையெனலாமா?
அதை வேட்டையென்றும் சொல்லலாமே?

எல்லாம் விதியென்றால்
மேலுள்ளவனின் விளையாட்டென்றால்
தனக்கும் சொந்தத்திற்கும் சொத்தெதற்கு?
மரம் வைத்தவனே
நீர் ஊற்ற மாட்டானோ?
அடிப்படையில் 'இறை'-யை
அறியாததால் வரும் பிழையா?

தன் வலியும் சொந்தங்களின் வலியும்
பெரிதெனக் கொண்டு
மனம் விதி மீற முயலுவதும்
மதி பிழறிச் செல்வதுவும் விதிதானோ?
இல்லை வெறும் சுயநலமோ?

விதி மீறும் குற்றமென
மனம் கொள்ளக் கூடாதென்று
'அது உன் கடமை',
செய் அதன் பலனை எதிர்பாராதே என்பது
வழிகாட்டும் வார்த்தையா
வலிகூட்டும் வித்தையா?
மனமிருகத்திற்கு இசைகூட்டும்
'கடமை' என்பதா? கயமை என்பதா?

பீலியானாலும் அச்சிறும்,
சிறிது பெரிதை ஒருநாள்
முழுதாய் எதிர்க்கும்;
எல்லைகளின் விளிம்புக்கு
உணர்வுகள் சென்றால்
உண்மை வெடிக்கும், பொய்கள் கிழியும்!

நிற்கும் களம் பொறுத்து
புரட்சியென்றும் கலகமென்றும் காணப்படும்.
விதி கொடுத்த வழியென்று காண்பாரோ?
பாரதி போல கலி முடிவென்று ஏற்பாரோ?

உயிர் மதித்து அடிமை மறுத்து
எல்லார்க்கும் அறிவு மலர்க்கும்
புதியதோர் உலகத்தின்
வாழ்வின் விதையெனவே அது காணப்படும்!