Tuesday, April 7, 2009

நீதான் தலைவனே (அ) அழுகிய முட்டைகள் கலைக்க முயலும் கனவுகள்

நீதான் தலைவனென்றே
நால்வர் சொன்னர் என்னிடம்.

விழிகள் விரிந்தன
புருவங்கள் உயர்ந்தது
தலை கொஞ்சம் கனத்தது
இருந்தும்
கால்கள் வானில் பறந்தன.

என்னைச் சுற்றி
ஒளிவட்டம் தெரிகிறதாவென
எனக்கொரு சந்தேகமும் வந்தது.
யாரைக் கேட்பதென புரியவில்லை.

கூட்டமும் கூடியது என்னைச் சுற்றி
நால்வர் பதின்மராயினர் நூற்றுவராயினர்.

இரத்தத்தின் இரத்தங்களே
உடன்பிறப்புக்களேயென
உரத்து அழைக்கத் தயாரானேன்.

எங்கிருந்தோ வந்தென்
முகத்தை நனைத்தது ஓர்
அழுகிய முட்டை!
ம்ம்.. என் கனவு கலைந்தது!
விடியலின் வெளிச்சமும் முகத்திலடித்தது!

இருக்கட்டும் காத்திருக்கிறேன்
இன்றின் இரவுக்காய்.
அடுத்த தவணைக் கனவிலாவது
கூடும் கூட்டத்திற்கு லெக்பீஸூம்
என் தலைமைக்கு
ஒரு பெட்டியும் தயார் பண்ணப் பார்க்கிறேன்.


பின்குறிப்பு:-

சுப்பிரமணியம் சுவாமிக்கு விழுந்த முட்டையும், சிதம்பரத்திற்கு கிடைத்த செருப்பும் வேறல்ல. தொடர்ந்து அடக்கப்பட்ட சிந்தனைக்கு எதிரான சிந்தனை வெளிப்பாடுதான். கூட்டமாய் கூடியவர்கள் (தமிழக வழக்குரைஞர்கள்), கூட்டமாக இருந்தாலும் இன்னமும் பொது மக்களுடன் முழுதாய்ச் சேராது தனியாய்த் தான் இருக்கிறார்கள். இல்லையெனில், அவர்களை அடக்கிட தமிழக அரசும், காவல்துறையும் துணிந்திருக்க மாட்டார்கள். அழுகிய முட்டைகள் தயாராய்த்தான் இருக்கின்றன, ஆனால் இன்னமும் தமிழக மக்கள் தயாராகவில்லையெனத் தோன்றுகிறது.

தமிழகத்தின் தேவை, அழுகாச்சி சீரியல்களோ, சூப்பர் சிங்கரோ, ஐபிஎல்லோ, டாஸ்மாக்கோ அல்ல! அழுகிய முட்டைகளின் தொடல் படல்தான், பலரின் தவறான கனவுகளைக் கலைத்திட! கொஞ்சம் துணிச்சலும் தேவை தான்! துணிச்சலென்பது வன்முறைக்கான வெறி அல்ல, தவறுகள் கண்டு சிந்திப்பதுவும் கேள்விகள் கேட்பதுவும்தான்!

பிகு2:- அழுகிய முட்டைகள் இதில் வெறும் குறியீடுதான், உண்மையான தேவை மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் சமூகத்துக்கும் எது முக்கியத் தேவையென்ற சமுதாயச் சிந்தனை மாற்றம்தான்.