Sunday, September 3, 2023

சனாதன தர்மமும் சமகால அதர்மமும் ஒழியட்டுமே!


சனாதனமென்றால் எல்லாக் காலமும்

தர்மம் என்றால் நெறிமுறை

எல்லாக் காலத்துக்குமான நெறிமுறை

எல்லாக் காலத்துக்குமான வாழ்முறை 


சனாதன தர்மம்

நான்மறையிலில்லா வார்த்தை 

சனாதன தர்மம்

சமஸ்கிருதத்துக்குச் சொந்தமில்லா வார்த்தை


புத்தன் பேசிய பாலி மொழி வார்த்தை

தம்மோ சனாதன

புத்தனுக்கு முன்னே அவனி்ன் நிலத்தில் 

பலரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை

தம்மோ சனாதன


காலத்தின் கடத்தலில்தம்மோ சனாதன

சனாதன தர்மமாகிறது

நெறி மாற்றப்பட்டு கருத்து மாற்றப்பட்டு

சமஸ்கிருதமும்இந்துமதமும்

சொந்தம் கொண்டாடும் வார்த்தையிது


புத்தன் நல்வாழ்வு வழி

அன்பு அறநெறி தாங்கியவன்

மனக்கடலின் அலைகளை வென்றவன்

வார்த்தைகளை உருவாக்கியவனல்லன்

மொழியைத் தாங்கியவனல்லன்


வாழ்க்கையை குழப்பத்தின் வழியிலிருந்தும்

கடுங்கட்டுப்பாட்டுப் பிடியிலிருந்தும் விலக்கி

எளிமையின் பாதைக்கும்

அமைதியின் பாதைக்கும் 

கொணர முயன்றவன் புத்தன்


உண்மை மற்றும் அன்பின் வழியையே

எக்காலத்திற்கான வாழ்நெறியெனும்

சனாதன தர்மமென்றான் புத்தன்


பின்னொரு காலத்தில்

சமஸ்கிருதம் அந்த வார்த்தையை வென்றது

அதன் பழம் பொருளைத் தின்றது

இன்றதைத் தாங்குவது

வெறும் அரசியல்வியாதிகள்தாம்


மனு தர்மம் நால்வர்ணம்

தூக்கிநிறுத்தும் வெறும்பேதம்

இன்றின் சனாதன தர்மம்

அழிந்து போகட்டும்

சமுதாயத்தை பிளந்துவைக்கும்

சனாதன தர்மம்

இன்றின் கேள்விகளுக்கு முன்

பொடிப்பொடியாகும்

பேதங்களே நீங்கள் போய்வாருங்கள்


கடவுளருக்கும் 

நம்பிக்கைகளுக்கும்

பிறழ் சனாதனம் தேவையில்லை

மண்ணின் மைந்தர்களை

சரிநிகர் சமானமென

கொண்டாடா சனாதனம் 

அழியட்டுமே ஒழியட்டுமே!


கதைகளுக்குத் தேவை

பொய்கள் 

திரை விலகியபின் அவையெதற்கு?

பொய்ச் சனாதன தர்மத்திற்கு

விடை கொடுப்போம்