Thursday, March 5, 2009

எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

ஒரு சாத்தானின் ஆட்சியிலே
இன்னொரு சாத்தான் என்ன செய்யும்?
சாத்தானின் காலை
சாத்தான் வாரும் வித்தைதானே?

எந்தச் சாத்தானும் இதில்
ஓயப் போவதில்லை!


விடியல் முதல் படுக்கை வரை
பிழைப்புக்கு வாழ்ந்து தினம்
போராடும் மக்களோ
ஒரு சாத்தானுக்கு வாக்களித்துப் பின்
அடுத்த சாத்தானை நோக்கி!


சாத்தான்களின் வித்தைகளில்
சிந்தனை இழந்து நீ
தீக்குளிப்பது தமிழையெப்படி
வளர்க்கும்? எரித்துவிடாதா?
போராடத் துணிந்த மனம்
தீயிலெரிந்து போவது சரியா?

பகுத்தறிவை தூர எறிந்துவிட்டாயோ?

அரசுப் பணத்தை அள்ளியிறைப்பர்
தீக்குளிப்பவனை வீரனென்பர்
தெருத் தெருவாய் தமிழ் கூவி விற்பர்
இந்தச் சாத்தான்களின் தமிழ்த்தீ
மக்களைத்தான் எரிக்கும்!

சாத்தான்களில் பலவகை;
பகுத்தறிவை தூர எறிந்த நீ
தமிழகத்தை திரும்பப் பார்
நிச்சயம் நம்புவாய்!

தன் வீட்டைக் கோட்டையாக்கி
பணத் தோட்டமாக்கிப் பின்
ஊரான் பிணம் தின்னும் சாத்தான்கள் இவை!
இதில் எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

பின்குறிப்பு:- நாடொறும் நாடி முறை செய்யா - மு.க வும், ஜெவும், இவர்களைச் சூழ்ந்த மற்ற தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். நாடகக் களம் இதுவே, இவர்களுக்கு தேவை கிடைக்கப்போகும் வாக்குகள் மட்டுமே, பற்றியெரியும் உயிர்கள் பற்றிய சிந்தனையல்ல. தீக்குளிப்பது தவறு, தேவையில்லாததென மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் தெளிவும் இவர்களுக்கில்லை. தமிழையும் பகுத்தறிவையும் விற்று ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், அவை பற்றிய அறிவே இல்லாமல் வந்த ஜெவையும் தவிர இப்போதைக்கு வாக்களிக்க யாரும் இல்லையென்பது, தமிழக மக்களின் ஒரே வழியா இல்லை அறிவின்மையா? மக்கள் கூடிப் போராடினால் தான் மாற்றம் வரும், வெளியிலிருந்து வரப்போவதில்லை. இன்றைய இந்தச் சாத்தான்கள் வேறெங்கிருந்தும் வரவில்லை, நம்மிடமிருந்துதானே?

இப்போதைக்கு ஈழத் தமிழர்களின் நிலையிலும் பெரும் தேக்கமே. நிச்சயம் இந்தியத் தேர்தலும் அரசியல்வாதிகளின் வாக்குத் தேவையும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. தேவை, அமைதியும் மறு பேச்சுவார்த்தைகளும்தான். தன்னுரிமை இல்லாவிட்டாலும் சம உரிமை கிட்டினாலும் அமைதி உடன் நிச்சயம் திரும்பிவிடும். புலிகளின் போக்கிலும் நோக்கிலும் மாற்றம் தேவை, போராட்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு மட்டுமாய் அனைவரும் மட்டுப்படுத்தினால் தீர்வு நிச்சயம். சிங்களப் பேரதிகாரம் எவ்வளவு வலி தரும் உண்மையோ, தமிழ்ப் புலிகளின், மற்றைய தமிழ்க் குழுக்களின் உள்ளெதிர்ப்பு நிலைகளும் அவ்வளவு வலி தரும் உண்மையே! இரண்டுமே (ஈழத்) தமிழ் மக்களின் நலனுக்கு என்றும் முழுப்பகையாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்:-
சென்னை: சாத்தானான ஒரு பெண்மணியை (ஜெயலலிதா) தமிழகத்தை மேய விட்டுவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்று தான் யோசிக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் உஜாலா:- இலங்கை: ஜெ. உண்ணாவிரதம்-10ம் தேதி சென்னையில்..!

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html
அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்? - http://vaigaraivaanam.blogspot.com/2009/01/blog-post.html