Thursday, January 22, 2009

அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்?

முறம் கொண்டு எதிர் நின்ற
தமிழ் மறப் பெண்களின்
வழி வந்தோமென்ற
பழம் பெருமையில்
கால் வழுக்கி நிற்கின்றாயே
அய்யகோ தமிழா,
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பேசுவதோ சமத்துவம்
சுவாசமெல்லாம் பேராசை;
வளர்ப்பது தோட்டம்
வாழவைப்பதோ குடும்பம்
இவர்கள் விற்பது மட்டும் தமிழா?
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
இந்த வசனமே போதும் தேர்தல்களுக்கு!
கேள்வி கேட்க வரும் வாய்க்கோ
வாழையிலை விருந்தும்
இலைக்குக் கீழே ஓராயிரமோ ஈராயிரமோ!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பொறுப்பாய் தமிழா
வரும் தேர்தலுக்கு முந்தைய நாள்
பதவி துறப்போம்
வரும் அகதிகள் கணக்கையும்
முழுதாய் மறைப்போம்.
மகக் குளத்திலும் மஞ்சள் மகிமையிலும்
மக்களின் நலனையெல்லாம்
முழுக்குக் கொடுப்போம்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

ஈரமென்றால் கண்ணெண்போம்
ஈழமென்றால் என்னென்போம்
பதவி கிட்டுமாயின்
தமிழர்க்கு தலையென்பார்
தலைப்பாகைச் சுமைகளிவர்களை
தலையாலே சுமக்கின்றாய் நீ தலைமுறைகளாய்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

முறச் சீற்றம் மறந்து
அறச் சீற்றம் பேசுவாரிவர்
நாளை தேர்தலென்றால்
இன்று மட்டும்
அரிவாள் சீற்றம் கொள்வதோடு
தோளோடு தோள் நின்று
டாஸ்மார்க்கில் உள்ளதடா தமிழென்பார்
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!


பின்குறிப்பு:-
இன்று தமிழக அரசவையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால், இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தீர்மானத்தைப் பற்றிய தகவலைப் படித்ததின் உந்துதலே இந்தக் கவிதை. இது மட்டுமல்ல, இலங்கை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் மற்றும் மற்ற முக்கிய தமிழகத் தலைவர்களின் பொய்யான போக்குகளின் மிகுதியாலும் இந்தக் கவிதையெனலாம்.

புலிகள் மட்டுமே இலங்கைத் தமிழர்களல்ல, அப்பாவி மக்களின் நிலையைப் பற்றிப் பேசினாலே புலிகளைக் காப்பாற்றப் பேசுவதாகப் புரட்டித் திரிவதும், பயந்தும் பயமுறுத்தியும் பேச முயல்வதுவும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இவர்களினால் வெறுமனே உருவாக்கப்படுவது உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமேயன்றி வேறென்ன? இது கோமாளித்தனமேயன்றி வேறென்ன?

நடப்பது உள்நாட்டுப் போர் தான், சம உரிமைக்கான போராட்டம், பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லையென அமெரிக்கா வந்து சொன்னால் ஏற்பவர்கள் இவர்கள். மக்களின் நிலையிலும், நாடு கடந்து வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலையிலிருந்து எண்ணிப் பார்ப்போமே, இடையில் அகப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு பொது உலக நிறுவனங்களைக்கூட இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பதேன்? புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் மட்டும் தேவையானதல்ல உரிமையும் விடுதலையும், இலங்கையின் தமிழர்களுக்கும் தானே அது தேவை? புலிகள் மட்டுமே இலங்கை அரசிற்கு பிரச்சினை இல்லை, அதற்குப் பின்னால் காத்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சம உரிமைப் போராட்டத்திற்கான தீர்வைத் தரத் தயாராயில்லாத சிங்கள அரசின் பெரும்பான்மை மனப்பான்மை தான் முக்கியக் காரணம். அது மாறாதவரையில் உண்மைத் தீர்வு கிட்ட வழியில்லை!

தொடர்புடைய இணைப்பு;-
http://thatstamil.oneindia.in/news/2009/01/23/tn-assembly-to-issue-final-request-to-centre.html

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html