Friday, November 9, 2007

பற்றியெரிவது பக்கத்து வீடுதானே?

பற்றியெரிவது பக்கத்து வீடுதானே?
எனக்கென்ன வந்தது,
அதற்கும் என் வீட்டிற்குமிடையே
நாலடி தூரம் இருக்கிறதே!

இன்றொரு பேச்சு நாளையொரு பேச்சு
நேற்று பேசியது மறந்தே போச்சு!
வழிபடுதல்தானே எமக்கு தெரியும்
உள்ளிருப்பது எதுவானால் என்ன?
வாழக் கற்றுக் கொள்ளாமல்
வழிபாடுகளுக்கு பொருளுமென்ன?

உள்ளிருப்பது எதுவென்று தெரிந்தால்
வந்த மதங்களின் நோக்கம் புரிந்தால்
எதை வழிபடுவாய் நீ?
உன்னையும் உடனிருப்பவரையும்
மறுக்கும் உனக்கேது வழி?

வெட்கமென்பது என்ன
யோசிப்பவர்களுக்கும் விடலைகளுக்கும் தானே
விதி விட்ட போக்கில் வாழும்
வேடிக்கை மனிதர்கள் நமக்கென்ன?

சிந்தை மடிந்து வாழும்
சந்தைக் கூட்டம்தானோ?
கேள்விகளே இறந்துவிட்டன
சுவாசம் மட்டும் எதற்கு?

பக்கத்து வீட்டின் தீ
உன் வாசலைத் தொடும்போது
பார்த்துப் பார்த்துக்
கைகொட்டிப் பழகிய நீ
என்ன செய்யப் போகிறாய்?

பின்குறிப்பு:-
எரிவது ஈழமானாலும், பாகிஸ்தான் ஆனாலும்
பக்கத்து ஊரின் சாதிக் கலவரமானாலும் என்ன,
கேள்விகள் கேட்க நாம் துணியாதவரை
பதில்கள் எங்கே எப்படிக் கிட்டும்?

Wednesday, September 5, 2007

ரெட்ரோ மனிதம்

பெருங் காற்றடித்து ஓய்ந்திருந்த
மழைக்கால மாலை
ஈரமாய் கண்முன் சாலை;

ஓரத்து பெருங்கட்டிடத்திலிருந்து
நாளின் வேலை முடித்து
இழந்ததைத் தேடி
வீட்டுக்கு ஓடும் நபர்கள்,
சாரிசாரியாய் கார்கள் சாலையில்!

பாதை நெரிசலை
கண்ணுக்குள் சுமந்து
பொழுதை முடிக்க
வீட்டுக்குள் செய்ய வேண்டியனவற்றை
தலைக்குள் சுமந்து
எப்போதும் போல்
அரைகுறை கவனத்துடன்
சாலையில் பயணம்!

அழுக்கான உடையோடு
குளித்துப் பல நாளாகி
சேறும் சகதியும் மேலாக்கி
வீதி ஒரமாய் பிச்சையெடுக்கும்
முகந்தெரியாத மனிதன் இருப்பதுவும்
அவன் பசியும் மனத்தேவையும்
பலருக்கும் தெரியவில்லை!

பலருக்கும் தெரியவில்லை
சாலையின் ஓரங்களில்
மழையில் நனைந்து
புதிதாய் முகம் காட்டும் மரங்களை!


எங்கே தெரியப்போகிறது
பள்ளி வாசலில்
காத்து நிற்கும் மழலையின் மனமும்,
வீட்டு வாசலில்
பூத்து நிற்கும் மலரின் முகமும்?

தன்னை மறந்ததாய்
ஒரு வேலை, வாழ்க்கை;
முன்னில் இருப்பவரும்
கண்ணுக்குத் தெரிவதில்லை!
படர்க்கையை மறந்துதான்
நாளும் உறக்கமும்;


நேரங்களில் நம் முகமே
நமக்கு அந்நியமாய்;
மெட்ரோ நெரிசலில்
சிக்கிய கார்கள் நகர்வதுபோல்
மனிதத்தையும் நகர்த்துகிறோம்!


---------------------------------------------------------------------------------------



விக்கியின் படி ரெட்ரோ:- http://en.wikipedia.org/wiki/Retro
----------------------------------------------------------------------------------------
படர்க்கை - தமிழ் இலக்கணத்தின்படி, தன்னிலை முன்னிலை தவிர்த்த
மற்றவர்களும், மற்றனவும் படர்க்கை ஆகும்,
ஆங்கில இலக்கணத்தின்படி தேர்ட் பர்சன்(third person)
--தன்னிலை - தன்னைப் பற்றிய
--முன்னிலை - முன்னே இருப்பவரைப் பற்றிய



----------------------------------------------------------------------------------------

Friday, July 13, 2007

ஆனந்தக் களி நடம் - அன்புடன் போட்டிக்கான கவிதை முயற்சி-1

ஓரிரு மாத இடைவெளிக்குப் பின் எழுத
நேரம் கிட்டியிருக்கிறது, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த
"அன்புடன்" குழுவினர் நடத்திய கவிதைப் போட்டியில்
இரு படங்களுக்காக நான் எழுதிய கவிதைகள் இதோ!



எனது கவிதைகள் பரிசுப் பட்டியலில்
இடம்பெறவில்லையெனினும், மிகச்சிறந்த கவிதைகளுக்கு
அளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி!


போட்டியை திறம்பட நடத்தி, முக்கியமாக, நேரத்தையும்
சிந்தனையயும் பயனுற செலவிட்டு, போட்டிகளை
நடத்திய குழுவினருக்கு எனது நன்றி! வாழ்த்துக்கள்!


இரு படங்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளில்
முதலாவது! கவிதைக்கான படமும் இணைத்துள்ளேன்.


ஆனந்தக் களி நடம்
---------------------------
இந்தச் சிறுமியின்

கண்களில் எத்தனை நட்சத்திரங்கள்,
காலையின் வெளிச்சம்
இவளின் முகத்தில் பிரகாசமாய்.

ஆடையின் வண்ணங்கள்
ஆனந்தம் தவிர வேறேதும் பேசவில்லை!
பார்வையின் கவர்ச்சி காட்டுது
அப்பழுக்கற்ற உண்மையை!

அமைதியின் பார்வை
இவளின் பார்வை;
ஆனந்தக் களிநடம்
இவளின் முகம்;

அலையறு நடுக்கடலின் அமைதி
இந்த முகத்தைக் காணக் காண!
இவள் காலங்கள் கடந்த
நம் கலாச்சாரத்தின் வடிவமா?
பூக்கள் தோற்கும்
இந்த மழலை முகம் கண்டு!
வாடாமல் காப்பது
உலகின் கடமையன்றோ?


குழையும் மனது
மழலையின் வெகுளிப் புன்னகையில்,
இது புன்னகையா? சிரிப்பா?
கேள்வியில் மயங்குதென் மனம்!
---------------------------14 ஏப்ரல் 2007------

Sunday, February 18, 2007

அருகில் வராதே!

அருகில் வராதே!

கைகோர்த்து கரை நடந்து
கால் நனைந்தது போதாதென்று
மழை கொண்டு
முழுதாய் நனைந்தது
நிழலாடுது நெஞ்சிலின்றும்!

நாட்களென்னவோ வரிசையாய்
நாட்காட்டியிலிருந்து
குப்பைத் தொட்டிக்கு;

நீயென்னவோ இன்னமும்
கண்ணுக்கு கானலாய்தான்!

காதலில் பிரிவென்னும் துயரன்றி
பெருந்துயர் வேறேது?
தென்றலாய் உடனிருந்தபோது
பற்றிய தீயில்
இன்னும் எரிகிறேன்
தயவுசெய்து அருகில் வராதே!

அன்புடன்,
நம்பி. பா.

Friday, February 16, 2007

தலைகீழ் உலகம் - ஒரு மாறுபட்ட பார்வை!



வானம் மேலே, பூமி கீழே!! எத்தனை பொய்யான ஒரு கருத்து,
பூமிக்கு வெளியே காற்று மண்டலம் தாண்டி உயரே சென்றால்,
கண்முன்னே பூமியும் உயர்ந்து நிற்கிறதென்பதை நம் அறிவியல்
உலகம் ஏற்கனவே கண்டுவிட்டது. ஆனாலும் நாளுக்கு
ஒருமுறையேனும், வானம் மேலே, பூமி கீழேயென
நாம் சொல்வது இன்னமும் நிற்கவில்லை!




மேலொன்றும் கீழொன்றும் (ஆகாயத்தில்) இல்லையென்பது
மனிதர்களுக்கு இன்னும் மனதில் பதியாத ஒன்றாய்த்தான் இருக்கிறது.

அறிவியல் வளர்வதற்கு முன்னர் எத்தனை தவறான
கருத்துக்கள், சிந்தனைகள்! பூமியை சூரியன் சுற்றி வந்ததென்பதும்,
பூமியைச்சுற்றியே வான்கோள்கள் இருந்ததென்றுமிருந்த
தவறான நம்பிக்கைகள்! வான்வெளி அறிவியல் அனைத்தையும்
தலைகீழாய் மாற்றிப் போட்டுவிட்டது!

உலகம் என்னும் பந்து, வடக்கென்பதும் தெற்கென்பதும் மனிதன்
வழிகாட்டுவதற்கும், பயன்பாட்டு எளிமைக்கும் கொடுத்த திசைகள்,
அதில் வடக்கு மேலே இருக்கிறதென்பதுவும், தெற்கு கீழே
இருப்பதென்பதுவும், கற்பிதமென்ற கருத்துடன் தலைகீழாய்
வரையப்பட்ட உலகத்தின் வரைபடம் ஒன்றைக் காண
வாய்ப்புக் கிடைத்தது! மிகவும் வியப்பாய்
சிந்தனைக்கு கேள்வியாய் (விருந்தாய்) இருந்தது அந்த வரைபடம்,
வடக்கை மேல்புறமாயும் தெற்கை கீழ்புறமாயும் கொண்டே
உலகப் படத்தைப் பார்த்துப் பழகிய கண்களுக்கும் சிந்தனைக்கும்
பெருங்கேள்வியைத் தருகிறது இந்தப் படம்.



எப்போதும், அடியிலிருக்கும், ஆஸ்திரேலியாவை மேலே வைத்த
இந்தப் படம் நீராலானது உலகமென்பதை தெளிவாய் காட்டுகிறது.

இந்தப் படம் 1979 முதல் இருந்துவருகிறதென்பதும்
புதிய தகவலாய்த் தான் இருக்கிறது!


கடந்த சில நூற்றாண்டுகளாய்த் தான், உலகின் வடபகுதியை
மேல்புறமாகவும் தென்பகுதியை கீழ்ப்புறமாகவும் வைத்து
உலக வரைபடங்கள் வந்திருக்கின்றன. அதற்கு முன்பாக,
கிழக்கை மேலே வைத்த உலகப்படங்களை அராபியர்களும்,
தெற்கை மேலே வைத்த படங்களை சீனர்களும்,
இந்தியர்களும்(?) பயன்படுத்தியிருந்ததாக தெரியவருகிறது.

கேள்விகளின்பாற்பட்டது வாழ்க்கை,
மாற்றுக் கருத்துக்களின்பாற்பட்டது முன்னேற்றம்,

இந்த மாறுபட்ட உலகப் படம் மனதை யோசனைகளின்பால் செலுத்துகிறது.

தொடர்புடைய தொடுப்புகள்:

http://www.odt.org/NewMaps.htm#Mcarthur
http://flourish.org/upsidedownmap/
http://www.gisnet.com/notebook/unusual.htm




Friday, January 12, 2007

சாதி, இந்து மதம் மற்றும் நாளை!

இந்த பதிவு, மாற்றம் நம் மனதிலிருந்து துவங்க வேண்டுமென்ற
கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

சாதிப் பிரச்சினை, இந்து மதத்திற்கே உரிய பெரும் பிரச்சினை,
கால மாற்றத்தில், தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியில் இன்று
முன்னிலும் பெரிதாய் பேசப்படுவது; சில பத்தாண்டுகளுக்கு
முன்பிருந்த வாழ்நிலையை விட இன்றின் இந்தியாவில்
இது குறித்து பெரு முன்னேற்றமும் விழிப்பும் ஏற்பட்டுள்ளது!
மனு தர்மம் மற்றும் வர்ணாசிரமம் இவையிரண்டும்தான் இந்த
சாதிப் பிரச்சினைக்கு பெருங்காரணிகளாய் இருக்கின்றன.

பெரியார் போன்றவர்களின் பெருமுயற்சியால், தமிழகத்தின்
இன்றைய நிலை மற்ற பல வட மாநிலங்களைவிட பெரிதும்
சாதிப் பிரச்சினையில் முன்னேறியிருந்தாலும், இந்திய தேசத்தின்
ஒவ்வொரு துளி நிலத்திலிருந்தும் சாதியைப் போக்காமல்,
மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதுவும் நடத்தப்படுவதுவும் இயலாத
ஒன்று!

பிஞ்சுகளின் மனதிலும் நஞ்சை விதைக்கும் இந்த சாதி வேற்றுமையை
சமுதாயத்திலிருந்து முற்றிலும் களைய வேண்டும். ஆக்கமான
முயற்சிகளை அனைவரும் எடுப்பதே இதை அடுத்த
பத்தாண்டுகளிலாவது மக்கள் மனதிலிருந்து போக்குவதற்கான ஒரே வழி.

இன்றைக்கு இருக்கும் தலைமுறையையோ, உடன் பேசிப்
பழகுபவர்களையோ இதற்கு குறைகாட்டி எழுதுவதில் இந்தப்
பிரச்சினை தீராது. உடலின் எல்லா நோய்களுக்கும் ஒரே நாளில் ஒரே
நேரத்தில் மருந்தளிக்க முடியாது, ஒவ்வொன்றாய்த் தான் கவனிக்க
வேண்டும்.

வேதம் படித்தவர்கள், சாதி வேற்றுமை வேதத்தில் இல்லவே இல்லை,
காலத்தின் போக்கில் சிலரின் வாழ்வு முறைத் தேவைக்காக
ஏற்படுத்தப்பட்டதே இந்த நாற்சாதி (வர்ணாசிரம சதுர்வர்ணம்)
முறை என்று சொல்கின்றனர், உங்களுக்கு அறிந்த உண்மையை
ஊருக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!

கண்முன்னே, நம்போல் இன்னொருவரை தாழ்த்தவோ உயர்த்தவோ
செய்தல் பெருங்குற்றமென்பதை ஏற்கனவே அரசியல் சட்டம்
பேசிவிட்டாலும், ஒவ்வொரு இந்து மதத் தலைவரும் வெளிப்படையாய்
இது குறித்து மக்களிடம் நேரிடையாய் பேசாமல் இந்த குறையை
போக்க முடியாது.

ஒவ்வொரு அலுவலகம், பள்ளி மற்றும் பொது இடத்திலும்
"தீண்டாமை பெருங்குற்றம்" என அறிவிப்பு பலகை இருப்பது போதாது.
ஒவ்வொரு கோயிலிலும். ஒவ்வொரு கோயில் கதவிலும் அதை
எழுதி வைப்பதுவும், கோயில் பணியாளர்கள் ஒவ்வொருவரும்
இது குறித்த உறுதிமொழியை மாதம் ஒரு முறை எடுக்கச் செய்தல்
வேண்டும்.

வேதம் பெரிதென்று எண்ணினால், வேதத்தில் சாதி பேதம்
இல்லையென்றும், பிறப்பால் அனைவரும் சமம் எடுத்துச் சொல்ல
இந்து மதத் தலைவர்கள், மத விற்பன்னர்கள் அனைவரும்
முன்வருவார்களா?


இதற்கு தயாராகாவிட்டால், இன்றில் வழக்கிலிருக்கும் இந்து மதம்
நாளை இருக்குமா? நிச்சயம் இருக்காது!!

காலத்தின் தேவைக்கும், சக மனிதர்களின் மனிதத்திற்கும், உணர்வுக்கும்
உரிமைக்கும் இடங்கொடாத எதற்கும், காலம் இடங்கொடாதென்பது
யாவருமறிந்த உண்மை!


பிகு. செல்வன் அவர்கள் எழுதிய வலைப்பதிவின் தாக்கத்தால்
எழுதியது,
அவரின் பதிவு: http://holyox.blogspot.com/2007/01/227.html

Friday, January 5, 2007

மனமும் மழைக்கால மழலைகளும்!

மனமும் மழைக்கால மழலைகளும்!

தூவானப் பூக்கள்
ஈரம் தரும் நேரம்
அந்தியின் ஆர்ப்பாட்டத்துக்குள்
அடைக்கலமாகும் சூரியன்;

பொய்யறியாத இரு சிறு பிஞ்சுகள்
பூமழையில் நனைதல் கண்டேன்

விளையாட்டாய் வாழ்க்கை
உலகம் சுற்றிலும் இல்லாததுபோல்
மழை தீர மகிழ்ச்சி கூட
துள்ளியாடும் பிள்ளைகள்;

போன துளி உனது
அடுத்த துளி எனதென
ஆழித்துளிகளைக் கைகளுக்குள்
அடக்குதல் கண்டேன்;

காற்றும் குளிர் கூட்டிட
வானமும் சூரியனும்
காதல் வண்ணக் கோலமிட
மாலையென் மனதை நிறைக்குது!

பிள்ளைகளுக்காய் இருப்பதா
உலகுக்காய் போவாதாவென
வானத்துடன் சிவக்கப் பேசிவிட்டு
கடல் மறைந்தது சூரியன்;

அன்னையின் அழைப்பும்
பிள்ளைகளை ஈர்த்தது;
நிலவு வரப்பார்த்தது
நானும் அங்கே கலைந்தேன்;

அன்புடன்,
நம்பி.பா.