காதலின் நீண்ட விழியசைப்பில்



காதலின் நீண்ட விழியசைப்பில்
நேற்றின் காத்திருப்புக்கள்
காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.

எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்
இதயம் நிரப்பியென்
சிந்தனையின் வாசம் மொய்த்தன.

காட்சியின் பிழையில்
நிலவொன்று உலகின் ஓளியாய்
நிகழ்வுகளில் வந்து நின்றது.

புன்னகையின் இதழ் விரிப்புக்கள்
பாதையின் நெருஞ்சிகளை
நெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.

பதின்மத்தின் பசுமை நினைவுபோல்
ஏக்கத்தின் பசிகளுக்கும் என்
இயக்கத்துக்கும் காதல் துணையானது.

அன்பின் ஒரு வடிவம்தான் காதல்
ஆனால்
அதன் வீச்சோ ஆழமானது.

கவிதையின் ஒரு முகம்தான் காதல்
ஆனால்
அதன் பொருளோ என்றும் புதிதானது.


மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்.


எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!

பூக்களின் பாதையில் புன்னகைக்க மறந்த விழிகள்...

ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்
அழியாத விளக்கென்பதுவும் பொய்,
மாற்றமென்பதே ஒரே மெய்.

மாற்றத்தின் பாதையில்
ஏமாற்றத்தின் சுவடுதனை
மெல்ல நுழைக்கும்
பொய்யான வாக்குறுதிகள்
பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,

தேவைகளுக்கான
விளக்கங்களும் மாறி இருக்கும்.

மாற்றம் பொய்யிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.

அன்று பூக்களின் பாதையில்
புன்னகைக்க மறந்த விழிகள்
பொய்யாய்ப் போய்விடும்.

அலையடித்த கரையில் நிற்கும்
நுரைத்த மணலாடாத கால்கள்
பொய்யாய்ப் போய்விடும்.

மாற்றத்தின் தேவையையும்
உணர மறுக்கும்
ஏமாற்றச் சிந்தனைகளை
விலக்கக் கற்றுக் கொண்டால்
பிரிந்திருக்கும் மாடுகள் கூடக்கூடும்.
அவை கூடி நின்றால்
வாடிய வயிறுகளுக்கும் உணவு கிட்டும்;

ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையுமே
சிந்தனையில் ஏந்தி ஏந்தி
மழுங்கிய மூளைகளுக்குள்
முட்களும் மலரும்.
குனிந்த முதுகுகள் நிமிரும், நிமிர்ந்தால்
முட்டிய கட்டைகளும் முறிந்து போகும்;

அப்போது மாற்றம் விதியிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.
விதிப்பயனுக்கான
விளக்கமும் மாறி இருக்கும்.

ஏற்கனவே எழுதியது:-
விதியும் வாழ்வின் விதையும் - http://vaigaraivaanam.blogspot.com/2008/09/blog-post.html





நீதான் தலைவனே (அ) அழுகிய முட்டைகள் கலைக்க முயலும் கனவுகள்

நீதான் தலைவனென்றே
நால்வர் சொன்னர் என்னிடம்.

விழிகள் விரிந்தன
புருவங்கள் உயர்ந்தது
தலை கொஞ்சம் கனத்தது
இருந்தும்
கால்கள் வானில் பறந்தன.

என்னைச் சுற்றி
ஒளிவட்டம் தெரிகிறதாவென
எனக்கொரு சந்தேகமும் வந்தது.
யாரைக் கேட்பதென புரியவில்லை.

கூட்டமும் கூடியது என்னைச் சுற்றி
நால்வர் பதின்மராயினர் நூற்றுவராயினர்.

இரத்தத்தின் இரத்தங்களே
உடன்பிறப்புக்களேயென
உரத்து அழைக்கத் தயாரானேன்.

எங்கிருந்தோ வந்தென்
முகத்தை நனைத்தது ஓர்
அழுகிய முட்டை!
ம்ம்.. என் கனவு கலைந்தது!
விடியலின் வெளிச்சமும் முகத்திலடித்தது!

இருக்கட்டும் காத்திருக்கிறேன்
இன்றின் இரவுக்காய்.
அடுத்த தவணைக் கனவிலாவது
கூடும் கூட்டத்திற்கு லெக்பீஸூம்
என் தலைமைக்கு
ஒரு பெட்டியும் தயார் பண்ணப் பார்க்கிறேன்.


பின்குறிப்பு:-

சுப்பிரமணியம் சுவாமிக்கு விழுந்த முட்டையும், சிதம்பரத்திற்கு கிடைத்த செருப்பும் வேறல்ல. தொடர்ந்து அடக்கப்பட்ட சிந்தனைக்கு எதிரான சிந்தனை வெளிப்பாடுதான். கூட்டமாய் கூடியவர்கள் (தமிழக வழக்குரைஞர்கள்), கூட்டமாக இருந்தாலும் இன்னமும் பொது மக்களுடன் முழுதாய்ச் சேராது தனியாய்த் தான் இருக்கிறார்கள். இல்லையெனில், அவர்களை அடக்கிட தமிழக அரசும், காவல்துறையும் துணிந்திருக்க மாட்டார்கள். அழுகிய முட்டைகள் தயாராய்த்தான் இருக்கின்றன, ஆனால் இன்னமும் தமிழக மக்கள் தயாராகவில்லையெனத் தோன்றுகிறது.

தமிழகத்தின் தேவை, அழுகாச்சி சீரியல்களோ, சூப்பர் சிங்கரோ, ஐபிஎல்லோ, டாஸ்மாக்கோ அல்ல! அழுகிய முட்டைகளின் தொடல் படல்தான், பலரின் தவறான கனவுகளைக் கலைத்திட! கொஞ்சம் துணிச்சலும் தேவை தான்! துணிச்சலென்பது வன்முறைக்கான வெறி அல்ல, தவறுகள் கண்டு சிந்திப்பதுவும் கேள்விகள் கேட்பதுவும்தான்!

பிகு2:- அழுகிய முட்டைகள் இதில் வெறும் குறியீடுதான், உண்மையான தேவை மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் சமூகத்துக்கும் எது முக்கியத் தேவையென்ற சமுதாயச் சிந்தனை மாற்றம்தான்.

எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

ஒரு சாத்தானின் ஆட்சியிலே
இன்னொரு சாத்தான் என்ன செய்யும்?
சாத்தானின் காலை
சாத்தான் வாரும் வித்தைதானே?

எந்தச் சாத்தானும் இதில்
ஓயப் போவதில்லை!


விடியல் முதல் படுக்கை வரை
பிழைப்புக்கு வாழ்ந்து தினம்
போராடும் மக்களோ
ஒரு சாத்தானுக்கு வாக்களித்துப் பின்
அடுத்த சாத்தானை நோக்கி!


சாத்தான்களின் வித்தைகளில்
சிந்தனை இழந்து நீ
தீக்குளிப்பது தமிழையெப்படி
வளர்க்கும்? எரித்துவிடாதா?
போராடத் துணிந்த மனம்
தீயிலெரிந்து போவது சரியா?

பகுத்தறிவை தூர எறிந்துவிட்டாயோ?

அரசுப் பணத்தை அள்ளியிறைப்பர்
தீக்குளிப்பவனை வீரனென்பர்
தெருத் தெருவாய் தமிழ் கூவி விற்பர்
இந்தச் சாத்தான்களின் தமிழ்த்தீ
மக்களைத்தான் எரிக்கும்!

சாத்தான்களில் பலவகை;
பகுத்தறிவை தூர எறிந்த நீ
தமிழகத்தை திரும்பப் பார்
நிச்சயம் நம்புவாய்!

தன் வீட்டைக் கோட்டையாக்கி
பணத் தோட்டமாக்கிப் பின்
ஊரான் பிணம் தின்னும் சாத்தான்கள் இவை!
இதில் எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

பின்குறிப்பு:- நாடொறும் நாடி முறை செய்யா - மு.க வும், ஜெவும், இவர்களைச் சூழ்ந்த மற்ற தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். நாடகக் களம் இதுவே, இவர்களுக்கு தேவை கிடைக்கப்போகும் வாக்குகள் மட்டுமே, பற்றியெரியும் உயிர்கள் பற்றிய சிந்தனையல்ல. தீக்குளிப்பது தவறு, தேவையில்லாததென மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் தெளிவும் இவர்களுக்கில்லை. தமிழையும் பகுத்தறிவையும் விற்று ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், அவை பற்றிய அறிவே இல்லாமல் வந்த ஜெவையும் தவிர இப்போதைக்கு வாக்களிக்க யாரும் இல்லையென்பது, தமிழக மக்களின் ஒரே வழியா இல்லை அறிவின்மையா? மக்கள் கூடிப் போராடினால் தான் மாற்றம் வரும், வெளியிலிருந்து வரப்போவதில்லை. இன்றைய இந்தச் சாத்தான்கள் வேறெங்கிருந்தும் வரவில்லை, நம்மிடமிருந்துதானே?

இப்போதைக்கு ஈழத் தமிழர்களின் நிலையிலும் பெரும் தேக்கமே. நிச்சயம் இந்தியத் தேர்தலும் அரசியல்வாதிகளின் வாக்குத் தேவையும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. தேவை, அமைதியும் மறு பேச்சுவார்த்தைகளும்தான். தன்னுரிமை இல்லாவிட்டாலும் சம உரிமை கிட்டினாலும் அமைதி உடன் நிச்சயம் திரும்பிவிடும். புலிகளின் போக்கிலும் நோக்கிலும் மாற்றம் தேவை, போராட்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு மட்டுமாய் அனைவரும் மட்டுப்படுத்தினால் தீர்வு நிச்சயம். சிங்களப் பேரதிகாரம் எவ்வளவு வலி தரும் உண்மையோ, தமிழ்ப் புலிகளின், மற்றைய தமிழ்க் குழுக்களின் உள்ளெதிர்ப்பு நிலைகளும் அவ்வளவு வலி தரும் உண்மையே! இரண்டுமே (ஈழத்) தமிழ் மக்களின் நலனுக்கு என்றும் முழுப்பகையாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்:-
சென்னை: சாத்தானான ஒரு பெண்மணியை (ஜெயலலிதா) தமிழகத்தை மேய விட்டுவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்று தான் யோசிக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் உஜாலா:- இலங்கை: ஜெ. உண்ணாவிரதம்-10ம் தேதி சென்னையில்..!

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html
அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்? - http://vaigaraivaanam.blogspot.com/2009/01/blog-post.html