Tuesday, November 13, 2012

வாழ்த்துக்களும் தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளும்!


தீபாவளி வாழ்த்துக்கள்!!

சிறு பிள்ளையாய் இருந்தக்கால் புத்தாடைக்கும் பட்டாசுக்குமாய் விழிகள் விரிந்து மனம் மகிழ்ந்து கொண்டாடிய பண்டிகை. பின்னர் பண்டிகைக்காக கொண்டாடுவதோடு சரி, அதன் அடிப்படை மதக் கருத்துக்காக கொண்டாடுவதில்லை.

தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளை கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்!

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென ஒரு தனிக்கதை இருக்கிறது. தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் நரக சதுர்த்தியென நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதை கொண்டாடும் விதமாக, வடக்கில் இராமன் இராவணனை வென்று தனது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து நாடு திரும்பியதை மகிழ்ந்து கொண்டாடும் விதமாக, மேற்கில் காளியை வணங்கும்விதமாக, இலட்சுமியை வணங்கும்விதமாக, புத்தாண்டுத் தொடக்கமாக, இன்னமும் பலவிதமான காரணங்களுடன் இந்து மதத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

சமண மதத்தில் மகாவீரர் பரிநிர்வாணமடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீக்கியமதத்திலும் அவர்களது ஆறாவது குரு 'குரு ஹர்கோபிந்த்' சிறையிலுருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறுமாறும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இவையனைத்திலும் பொதுக் கருத்தாக, தீயனவற்றை நீக்கி நல்லனவற்றை முன்னிறுத்தும் அடிப்படைக் கருத்தில்தான், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அறுவடை கால முடிவை முன்னிறுத்துமாறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குளிர்காலத்தின் துவக்கத்தை நினைவுறுத்துமாறும், குவியும் இருளினைப் போக்கி ஒளிதர, விளக்குகளை ஏற்றியும், ஒளி/ஓலி தரும் பட்டாசுக்களை கொளுத்தியும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையைப் போன்றே, உலகின் மற்ற கலாச்சாரங்களிலும் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இதே கருத்தையொட்டி அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் துவக்கத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இங்கே அமெரிக்காவில் மிக பெரிதாக இன்று கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையின் அடிப்படைக் கருத்தும், கொண்டாடப்படும் காலமும் இதுவே. இந்த ஹாலோவீன் பண்டிகையின் மூலமாக பழைய பேகன் மற்றும் செல்டிக் கிரேக்க ஷாமன் பண்டிகைகளான 'முன்னோர் வழிபாடும்' கிட்டத்தட்ட இதே விதமாக, தீயனவற்றை நல்லவை வெல்லும் கருத்தோடும், ஒளியூட்டியும் கொண்டாடப்படுகிறது. இவையெல்லாமும் அறுவடை கால முடிவை முன்னிறுத்தமாறும் கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.

இந்த சிந்தனையை இன்னமும் கொஞ்சம் நீட்டித்தால், எனது பாட்டனாரின் நினைவுப்படி, தமிழகத்தில் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையே அல்ல, பொங்கல் மட்டுமே மக்கள் பண்டிகையாக, அறுவடைப் பண்டிகையாக இருந்தது. மேலும், போகித் திருநாளின் அடிப்படைக் கருத்து கிட்டத்தட்ட இந்த தீயன கழிந்து நல்லன சேர்த்தல்தான், இன்னமும் சொல்லப்போனால், அது பழையன கழிந்து புதியன புகுதலெனும் முதிர்ந்த கருத்தாகவும், நல்லன கெட்டனவென பாகுபடுத்தாமலும் இருக்கும் அடிப்படையில் பண்பட்ட 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வழியிலானது!

பண்டிகையின்பாற்பட்ட உற்சாகமும், புத்தாடை, பட்டாசுகளும், திண்பண்டங்களும் உருவாக்கும் ஒளிர்ந்த சிந்தனை எல்லார்க்கும் மகிழ்ச்சி தருவதே, அவையே இந்த பண்டிகைகளை மிகவும் கொண்டாடத்தக்கவையாக மாற்றுகின்றன, அவையே பண்டிகைகளை மேலும் கூட்டுகின்றன.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

http://en.wikipedia.org/wiki/Diwali

http://en.wikipedia.org/wiki/Samhain

http://en.wikipedia.org/wiki/Halloween

Saturday, February 12, 2011

எகிப்தின் மக்கள் எழுச்சி - இதற்கு முன்பும் இனியும்

எகிப்து தாஹ்ரிர் மைதானம் 
 எகிப்தின் இன்றைய மக்கள் எழுச்சிக்கும், எண்பத்து நான்கு வயதாகும் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் முப்பது ஆண்டு கால அடக்குமுறை ஆட்சியை வீழ்த்தியதற்கும் எத்தனையோ காரணங்களும் முகங்களும் இருந்தாலும், அவற்றில் மிக முக்கிய காரணம் - எகிப்தில் உணவுப் பொருள்களின் விலைவாசியின் அதீத உயர்வுதானென்றால் தவறாகாது. உலகமயமாக்கத்தின் சூறாவளிச் சுழலில் எகிப்து தேசம் முழுவதுமே வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. மேலும் உணவுத் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலைவாசி உயர்வின் காரணமாக எகிப்தியர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு அன்றாட உணவுப்பொருட்களினை வாங்குவதும் திண்டாட்டமாயிருந்தது. எகிப்தில் கடந்த ஆண்டு மட்டுமே கிட்டத்தட்ட இருபது சதவீதத்துக்கும் மேலாக உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது, இது அடித்தட்டு மக்களையும் நடுத்தர மக்களையும் பெரிதும் பாதித்திருக்கிறது, அதுவே அவர்களை போராட்டத்திற்கு அழைத்திருக்கிறது.

அதிபர் முபாரக்கின் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால அடக்குமுறை, மக்களை அவ்வப்போது வீதிக்கு போராட அழைத்திருந்தாலும், அவற்றையெல்லாம் காவல்துறை கொண்டு வன்மையாய் அடக்கியிருந்திருக்கிறார். தொடர் அடக்குமுறை, பெருமளவிலான விலைவாசிப் பிரச்சினை, வேலையில்லாப் பிரச்சினை மற்றும் துனீசியர்களின் துணிவும், எகிப்தியர்களைத் தூண்ட, இந்த முறை பொறுத்தது போதுமென்ற எண்ணத்துடன் ஜனவரி 25 அன்று எகிப்து கெய்ரோ நகரின் முக்கிய மைதானமான தாஹ்ரிர் (Tahrir - Liberation - விடுதலை) மைதானத்தில் கூடிய போராட்டக்காரர்களின் மனத் திண்மை, பதினெட்டு நாள் தொடர் போராட்டத்திற்குப் பிறகு இன்று பிப்ரவரி 11 வெள்ளியன்று, முபாரக்கை பதவி விலக்கியிருக்கிறது.  தற்போது இராணுவத்திடம் அதிகாரம் கைமாறி இருக்கிறது, மக்கள் பங்கேற்கும் தேர்தலுக்கு நாட்டை தயாராக்கும்வரை, எகிப்தை இராணுவமே ஆளவிருக்கிறது. இது எகிப்து மக்களுக்கும், துணிந்து போராடியவர்களுக்குமான முழுமையான வெற்றியில்லையென்றாலும், இது நிச்சயமான வெற்றி. எகிப்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான தேவையான வெற்றி, மக்களிடமேயிருந்து வந்திருக்கும் வெற்றி.

துனீசியாவின் மல்லிகைப் (ஜாஸ்மின்) புரட்சியின் உந்துதலில் வீதிக்கு வந்த எகிப்தின் புரட்சி, நிச்சயமாக துனீசியப் புரட்சியினும் பெரிதான வெற்றி. அது மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு மூலையிலுள்ள மக்களுக்கும் மிகப் பெரிய உந்துதலும், சம கால வரலாற்றின் பெரும் பேசு பொருளுமாகும்.

1975-இல் எகிப்தின் அதிபராக இருந்த அன்வர் எல் சதாத், தனக்கு துணை அதிபராக ஹோஸ்னி முபாரக்கை நியமித்த நாளிலிருந்து, அன்வருக்கு இரண்டாம் நிலையிலிருந்து அதிகாரத்தை இரசிக்க ஆரம்பித்தவர் முபாரக்.  இஸ்ரேலுடன், 1981-இல் அன்வர் எல் சதாத் கையெழுத்தி ட்ட ஒப்பந்தத்தை ஏற்காத சில எகிப்தின் இராணுவ அதிகாரிகள், அவரை சுட்டுக் கொன்றபின், அந்த மேடையில் உடனிருந்து, சிறு காயத்துடன் தப்பிய முபாரக், ஓரிரு வாரங்களில் 1981 அக்டோபர் 14-இல் எகிப்திற்கு அதிபரானார்.  அன்று அன்வர் எல் சதாத்தைக் கொன்றவர்களுக்கு மூளையாயிருந்த ஒருவர் அய்மன் அல் ஜவாஹிரி - பிற்காலத்தில் அல்-கய்தாவிற்கு ஒசாமா பின் லேடனுக்கு அடுத்த நிலையிருப்பதாக நம்பப்படுபவர்.

1981 முதல் நேற்று ( 2011 பிப்ரவரி 11) வரை எகிப்தை தனது கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருந்தவர்தான் முபாரக். மேலும், 1981 முதலாகவே எகிப்தை 'அவசர நிலை அடக்குமுறை' சட்டத்தின் உதவியாகவே முபாரக் ஆண்டு வந்திருக்கிறார்.  எதிர்ப்பதோ, எதிர்க்க நினைப்பதுவுமோ பெருங்குற்றம், காவல்துறை மற்றும் இரகசிய பாதுகாப்புத் துறையினரின் முழு ஆதிக்கத்தில் பல்லாயிரவரை நினைத்தபோது கைது செய்வதும் துன்புறுத்துவதுமாகவே இந்த முப்பது ஆண்டுகளாக எகிப்து இருந்திருக்கிறது. முபாரக் தனது இராணுவம், காவல்துறை மற்றும் இரகசிய பாதுகாப்புத் துறைகளை மட்டுமல்லாமல் அமெரிக்காவையும் முழுமையாக நம்பியிருந்தாரென்றால் அதிலெந்தத் தவறுமில்லை.

இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவிடம் ஒவ்வொரு ஆண்டும், இராணுவப் பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் அமெரிக்க டாலர் உதவி பெற்றுக் கொண்டிருந்தது முபாரக்கின் அடக்குமுறை அரசாங்கம். இந்த முப்பது வருடங்களில், நாற்பதிலிருந்து எழுபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்தை முபாரக் சேர்த்து வைத்திருக்கிறாரென சில பத்திரிக்கைகள் மதிப்பிடுகின்றன. முபாரக்கின் விலகலை பல காலமாகவே எதிர்பார்த்திருந்த அமெரிக்கா, துவக்கத்தில் முபாரக்கிற்கு எதிரான மக்களின் இந்த போராட்டம் குறித்த தெளிவான தகவல்கள் இல்லாமலிருந்தாலும்,  உடன் சுதாரித்துக் கொண்டுவிட்டனரென்றே சொல்லலாம். முபாரக்கின் விலகலும், மக்கள் தேர்தல் மூலமாக அடுத்த தலைவரை எகிப்திற்கு கொணர்வதும், அமெரிக்காவின் நலனுக்கும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தெளிவான ஓங்கிய நிலைக்கும் மிக முக்கிய தேவை. எல் பரேடி போன்ற மேற்கு நாடுகளுக்கு சுமுகமான ஒருவரையே அடுத்த தலைவராக எகிப்து பார்க்கவிருக்கிறது.

2005-இல் கெபயா (Kefeya - enough - போதும்) என்ற குழுவினரின் 'போதும் முபாரக்கின் ஆட்சி' என்ற இயக்கத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஷின் மறைமுக உதவியுடனே முழுமையாக அடக்கினார் முபாரக்.  கெபயாவின் உந்துதலால், 2008-இன் இறுதியில் 2009 ஏப்ரல் 6 எனும் முகப்பக்கத்தின் பக்கத்தில் (Facebook Page - April 6 Youth Movement) எகிப்தின் இளைஞர்களால் துவக்கப்பட்டு எழுபதாயிரத்திற்கும் மேலான உறுப்பினர்களுடன், வீதிக்கு வரத் துவங்கிய போராட்டத்தையும், அடக்குமுறையின் உதவியால் முபாரக் அடக்கியிருந்தார். இன்றைய போராட்டக்காரர்களுக்கு, அவையெல்லாம் ஒரு பாடமாக இருந்திருக்கிறது, அந்த அனுபவங்களின் பலத்துடன் ஜனவரி 25-இல் வீதிக்கு வந்த போராட்டக்காரர்கள், இன்று அவர்களின் முதல் முக்கிய கோரிக்கையான முபாரக்கின் பதவி விலகலை வென்றிருக்கிறார்கள்.

ஆனால், முபாரக் பதவி விலகியிருந்தாலும், முழுதாய் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்திருக்கிறாராவென்பது முக்கிய கேள்வி. முபாரக்கிற்கு இரண்டாம் நிலையில் துணை அதிபராயிருக்கும் ஒமார் சுலைமான், எகிப்தின் இராணுவத்துடன் கூட்டாகத் தலைமைப் பொறுப்பிலிருந்து, எகிப்தை அடுத்த தேர்தலுக்கும், அவர்களின் வழியிலான, மக்களாட்சிக்கும் வழி நடத்தவிருக்கிறார்கள். ஒமார் சுலைமான், முபாரக்கின் இருபது வருடங்களுக்கும் மேலான நண்பர், இன்று முபாரக்கினை மக்கள் வெளியேற்றியக் காராணமாயிருந்த முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியினை தூக்கிப் பிடித்தவர். மேலும் எகிப்தின் இராணுவத் தலைமையிலிருப்பவர்களும் முபாரக்கின் நம்பிக்கைகுரியவர்கள்தாம். எது எப்படியிருந்தாலும், எகிப்தின் மக்களுக்கு முபாரக்கை விரட்டியது மிகப் பெரிய வெற்றி, முன்னூற்றுக்கும் அதிகமானவர்களின் உயிரைத் தியாகம் செய்து, பதினெட்டு நாட்களாக வீதிகளில் தளராமல் போராடியவர்களுக்கும், அதற்கான பல மாதங்களாக ஆயத்தங்களில் இருந்தவர்களுக்கும் மிக மிகப் பெரிய ஆறுதல்.

முகப்பக்கத்தின் தொழில்நுட்பத்தை முழுமையாக மக்களின் நலனுக்காக பயன்படுத்திய எகிப்தின் இளைஞரும், இணைய தேடுபொருள் தளம் கூகிள் நி றுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க பிரிவில் பணிபுரியும் வேய்ல் ஊணிம் (Wael Ghonim) என்பவர், தற்போதைய போராட்டத்தின் பின்னிருக்கும் முக்கிய மூளைகளுள் ஒருவராவார்.  முப்பது வயதேயாகும் வேய்ல், முகப்பக்கத்தில் (http://www.facebook.com/ElShaheeed), தனது ஆதரவாளர்களுடன் இன்னுமொரு முறை, எகிப்தின் இளைஞர்களையும் எழுச்சியாளர்களையும் ஒன்று திரட்டினார். இரண்டு இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக சேர்த்து எகிப்தின் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு இலட்சத்திற்கும் மேலான உறுப்பினர்களுடன் இன்று உள்ளது இந்த குழுப் பக்கம் (Facebook Team page). எகிப்தில் போராட்டம் உச்சத்திற்கு வந்தபோது, முபாரக்கின் காவல்துறை ஜனவரி 27 அன்று இவரை கடத்தி, கண்ணைக் கட்டிய நிலையில் பதினோரு நாட்களுக்கு கைது செய்து வைத்திருந்த காவல்துறை, மனித உரிமை ஆர்வலர்களில் அழுத்தத்தினால், வேய்லை பின் பிப்ரவரி 6 அன்று விடுவித்தனர்.  ஜனவரி 25 அன்று துவங்கிய போராட்டம், வேய்ல் விடுவிக்கப்பட்டபின் எகிப்தின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த உணர்ச்சிமிக்க பேட்டியினால் போராட்டம், மறு எழுச்சி கண்டது. தான் இந்த போராட்டத்திற்குத் தலைவனல்ல, மக்களே தலைவர்களென்ற முழக்கத்துடன், வேய்ல் உயிரைத் துச்சமாக மதித்த மற்ற போராட்டக்காரர்களுடன், தாஹ்ரிர் மைதானத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். வேய்லின் பேட்டியை ஆங்கில உரை வரிகளுடன் இங்கே காணலாம் - http://thelede.blogs.nytimes.com/2011/02/08/subtitled-video-of-wael-ghonims-emotional-tv-interview/?hp

ஒரு தனிப்பெரும் தலைமையோ, குழுவின் தலைமையோ இல்லாமல், பிரமிடு போல் அசையாமல் அசைக்க முடியாமல் இருந்த முபாரக்கை வீழ்த்தியிருக்கிறார்கள் இந்தப் போராட்டக்காரர்கள்.
போராளிகள் எப்படியிருப்பார்களோவெனும் எண்ணத்திலும் பயத்திலுமிருப்பவர்கள், அவர்கள் நம்மைப் போல சாதாரணமானவர்கள் தாமெனும் நம்பிக்கையும் தெளிவையும் எகிப்தின் தாஹ்ரிர் மைதானம் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட எழுபது சதவீதப் போராட்டக்காரர்கள் இளைஞர்கள், போராட்டத்தின் பிற்பகுதியில் பெண்களும் ஓரளவில் பங்குகொண்டனர்.  முஸ்லிம் சகோதர்களெனும் (Muslim Brotherhood), எகிப்தின் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களும் போராட்டக்காரர்களில் இருந்தனர், ஆனால் அது எகிப்து மக்களின் உரிமைக்கான போராட்டமாயிருந்தது, மதத்தை முன்னிறுத்திய போராட்டமாக இல்லை. அதுபோல, இவர்களின் முழுப் போராட்டமும் முற்றிலுமாக வன்முறை தவிர்த்த போராட்டமாகவே இருந்தது, இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்தபோதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றாலும், இந்தப் புரட்சியாளர்களால் எந்த ஒரு பொதுச் சொத்து சேதமும், எவரும் தாக்கப்படவில்லை என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு.

ஜனவரி 25 அன்று தாஹ்ரிர் மைதானத்தில் குவியத் துவங்கிய போராட்டக்காரர்களைக் கண்டு முதலில் முபாரக் பெரிதாய் கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஆனால் அந்தப் போராட்டக்காரர்களின் உறுதி முபாரக்கை விலக்கியிருக்கிறது. துவக்கம் முதலாகவே, முபாரக்கின் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்தின் காவல்துறை போராட்டக்காரர்களை அடக்க வீதிக்கு வரவில்லை, மேலும் முபாரக்கின் இராணுவம் பாதுகாப்புக் காரணங்களுக்காக எகிப்தின் வீதிகளில் வந்தது. ஆனால், மக்களை எந்தக் காரணம் கொண்டும் தாக்கமாட்டோமென்ற எகிப்தின் இராணுவத்தின் நிலை, முபாரக்கை இறுதியில் அசைத்திருக்கிறது. இராணுவம் முபாரக்கின் பக்கம் நிற்கவில்லை, இன்று ஆட்சி மாற்றத்தை தன் கையில் எடுத்திருக்கிறது. மக்களளவில் புதிரான இந்த நிலை எகிப்தை அடுத்த நிலைக்கு வழிகாட்டுகிறது இன்று. போராட்டக்காரர்களின் இன்றைய வெற்றியில் மகிழ முடிகிறது, ஆனால் அது முழுமையான மக்களின் வெற்றியாக, மக்களின் ஆட்சியாக மாற வேண்டுமென்பது பெரும் நம்பிக்கையாகவே இன்று இருக்கிறது.
எகிப்தின் எழுச்சியின் பின், ஒரு குவிந்த தலைமையும், தெளிந்த நோக்கமும் இல்லாமலிருப்பது இனி எழுதப்படும் வரலாற்றை பெரிதாய் பாதிக்கும். இராணுவத்தின் வழிகாட்டுதலூடான மக்களாட்சிக்கான மாற்றம் புரட்சியாளர்களை எந்த அளவில் திருப்திப்படுத்துமென்று தெரியவில்லை. ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு, முபாரக்கின் விலகலே மிகப் பெரிய வெற்றி - அந்த அளவிலேயே எகிப்தின் எழுச்சி இன்று நிற்கிறது.


அதிகாரத்திற்கு முன்னே
மதிகெட்டு நிற்பதுவும்
அடக்குமுறை தான்
வழியென்றே மயங்குவதுவும்
கதிரின் ஒளிக்கு முன்னே
நிழலே வேண்டாமென்று
ஓடி ஓடி ஒளிய முயல்வதுவும்
நிழலைத் துரத்துதல்போல்
நாடகமாடி
எண்ணத்தை ஏமாற்றுவதுவும்போல்
உண்மையை சுவாசித்துக் கொண்டே
எத்தனை நாள் தான்
பொய்முகத்தை தரித்துக் கொண்டிருப்பது?
உண்மை பொய்யைக் கரைக்கும்
கரையில்லா வெள்ளமாய்
பொய்யை அடித்துச் செல்லாதோ?
எகிப்தின் எழுச்சி
அந்த உண்மையின் துளிகள்தாம்!

தொடர்புடைய சில இணையப் பக்கங்கள்.
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/eg.html

// Cairo from 2004 to 2008 aggressively pursued economic reforms to attract foreign investment and facilitate GDP growth. The global financial crisis has slowed the reform efforts. The budget deficit climbed to over 8% of GDP and Egypt's GDP growth slowed to 4.6% in 2009, predominately due to reduced growth in export-oriented sectors, including manufacturing and tourism, and Suez Canal revenues. In 2010, the government spent more on infrastructure and public projects, and exports drove GDP growth to more than 5%, but GDP growth in 2011 is unlikely to bounce back to pre-global financial recession levels, when it stood at 7%. Despite the relatively high levels of economic growth over the past few years, living conditions for the average Egyptian remain poor.//

http://www.guardian.co.uk/world/2011/feb/04/hosni-mubarak-family-fortune

// Mubarak family fortune could reach $70bn, say experts Egyptian president has cash in British and Swiss banks plus UK and US property//

Subtitled Video of Wael Ghonim’s Emotional TV Interview


http://thelede.blogs.nytimes.com/2011/02/08/subtitled-video-of-wael-ghonims-emotional-tv-interview/?hp

http://www.reuters.com/news/pictures/slideshow?articleId=USRTXXQOR
http://english.aljazeera.net/indepth/opinion/2011/02/201127114827382865.html
http://www.huffingtonpost.com/2011/02/11/egypt-military-resistant-change_n_822022.html
http://en.wikipedia.org/wiki/Anwar_El_Sadat

Friday, January 8, 2010

மெத்தனங்களின் மேற்கூரையில் (அ) கெவின் கார்ட்டரின் புலிட்சர் பரிசு பெற்ற 'சிறுமியும் வல்லூறும்'

வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994 - தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியது
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note


மெத்தனங்களின் மேற்கூரையில்
மனம் தினம்
செத்துத் செத்துப் பிழைக்கிறது

மனம் ஒரு வல்லூறாய்
நானும் ஒரு மிருகமென்பதை
தினம் நினைவூட்டுகிறது.

வெற்றிடங்களின் மாளிகை நிரப்ப
விருந்துகள் வேடிக்கைகள்
இருந்தும் என்றும் நிரம்பா மனங்கள்

கொண்டாட்டங்களின் ஆர்ப்பாட்டங்கள்
அள்ளாமல் குறையாமல்
போதை காக்க முயல்கின்றன

பொய்களி்ன் பித்தலாட்டங்கள்
பகல்களையும் இரவுகளையும்
நறுமணத்தில் தூக்கி நிறுத்த

மணம் குறையும் கணத்திலோ
{பொய்களின்} திரைகள்
கண்களுக்கும் சிந்தைக்கும் விருந்தாய்

மனமும் ஒரு வல்லூறாய்
தினம் நிற்கும் கணங்கள் தவிர
மற்றெல்லாம் நலமாகவே,
உலகெல்லாம் சுகமாகவே!!

பின்குறிப்பு-
கெவின் கார்ட்டர் செப்டம்பர் 13, 1960 - ஜூலை 27, 1994

1994ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படப் பத்திரிக்கையாளருக்கான புலிட்சர் பரிசு பெற்ற தொழில்முறை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர், தான் எடுத்த படங்களின் பாதிப்பினாலேயே பின் தற்கொலை செய்து கொண்டவர்.

1980களின் நடுவே, தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுக் கலவரங்கள் தொடர்பான பல படங்களை எடுத்து அங்கே நிகழுவதை தான் பணியாற்றிய பத்திரிக்கை வழியாக உலகுக்கு காட்சியாக்கிய கெவின் கார்ட்டர், 1993இல் உள்நாட்டுக் கலவரம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த சூடான் நாட்டின் தென்பகுதிக்கு சென்று எடுத்த ஒரு புகைப்படம், உலகெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளின் தொடர் விளைவே, பின்னாளில் கெவின் கார்ட்டரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது எனச் சொல்லலாம்.

தென் சூடானில், ஐக்கிய நாடுகள் அமைத்திருந்த உணவு முகாமை நோக்கி, குற்றுயிராய் தவழ்ந்து கொண்டிருந்த சிறுமியொருத்தியையும், அவள் இறப்பாளாவெனக் காத்திருந்த ஒரு வல்லூறு இரண்டையும் கண்ட கெவின் கார்ட்டர், காட்சியாக்கி, நிழற்படமாக்கிப் பின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்றார். போராட்டத்திலும், வறட்சியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்து, பட்டினியால் உயிரிழந்து கொண்டிருந்த பத்திரிக்கையில் படம் வெளிவந்த பின், மக்களிடையேயிருந்து வெளிவந்த தொடர் கேள்விகளும் எதிர்ப்புகளும், நியுயார்க் டைம்ஸை, படமெடுத்தபின் வல்லூறை கெவின் கார்ட்டர் துரத்திய பின்னே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாரெனவும், அந்தச் சிறுமி பிழைத்திருக்கலாமெனவும் பதிலளிக்க வைத்தது.

ப்ளோரிடாவைச் சார்ந்த 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க்' எனும் ஒரு பத்திரிக்கை இந்த படம் பற்றி பின்வருமாறு எழுதியது. 'அந்தச் சிறுமி வதைபடுவதை முழுமையாக படமெடுப்பதற்காக, கேமராவின் லென்ஸை சரிசெய்தவர், இன்னொரு உயிர்க்கொல்லி மிருகமே, அவ்விடத்திலான இன்னொரு வல்லூறே'

The St. Petersburg Times in Florida said this of Carter: "The man adjusting his lens to take just the right frame of her suffering, might just as well be a predator, another vulture on the scene."

இந்த படம் மட்டுமல்லாமல் இது போன்ற பல படங்களையும் எடுத்த கெவின் கார்ட்டர், அவரது படங்களுக்கான எதிர்வினைகளும், அவரது வாழ்வில் நடந்த சில மாற்றங்களு
ம், அவரைப் பின்னாளில் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. தற்கொலை செய்து கொள்ளும்போது, கெவின் கார்ட்டர் எழுதிய கடிதத்தின் ஒரு வரி -

வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note

கெவின் கார்ட்டர் மட்டுமல்ல, உண்மையில் நாமெல்லோருமே, நாளின் ஓரிரு கணங்களிலாவது அந்த வல்லூறாகவே இருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ அல்லது அறிய விரும்பாமலோ தனி உலகத்தில் தானெனும் சிந்தனையில், உலகின் நிகழ்வை, போக்கை, வலிகளை உணர மனம் தயாராயில்லாத நிலையில்தான் இருக்கிறோம்.

தொடர்புடைய இணைப்பு;-
http://en.wikipedia.org/wiki/Kevin_Carter