Friday, January 8, 2010

மெத்தனங்களின் மேற்கூரையில் (அ) கெவின் கார்ட்டரின் புலிட்சர் பரிசு பெற்ற 'சிறுமியும் வல்லூறும்'

வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994 - தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியது
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note


மெத்தனங்களின் மேற்கூரையில்
மனம் தினம்
செத்துத் செத்துப் பிழைக்கிறது

மனம் ஒரு வல்லூறாய்
நானும் ஒரு மிருகமென்பதை
தினம் நினைவூட்டுகிறது.

வெற்றிடங்களின் மாளிகை நிரப்ப
விருந்துகள் வேடிக்கைகள்
இருந்தும் என்றும் நிரம்பா மனங்கள்

கொண்டாட்டங்களின் ஆர்ப்பாட்டங்கள்
அள்ளாமல் குறையாமல்
போதை காக்க முயல்கின்றன

பொய்களி்ன் பித்தலாட்டங்கள்
பகல்களையும் இரவுகளையும்
நறுமணத்தில் தூக்கி நிறுத்த

மணம் குறையும் கணத்திலோ
{பொய்களின்} திரைகள்
கண்களுக்கும் சிந்தைக்கும் விருந்தாய்

மனமும் ஒரு வல்லூறாய்
தினம் நிற்கும் கணங்கள் தவிர
மற்றெல்லாம் நலமாகவே,
உலகெல்லாம் சுகமாகவே!!

பின்குறிப்பு-
கெவின் கார்ட்டர் செப்டம்பர் 13, 1960 - ஜூலை 27, 1994

1994ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படப் பத்திரிக்கையாளருக்கான புலிட்சர் பரிசு பெற்ற தொழில்முறை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர், தான் எடுத்த படங்களின் பாதிப்பினாலேயே பின் தற்கொலை செய்து கொண்டவர்.

1980களின் நடுவே, தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுக் கலவரங்கள் தொடர்பான பல படங்களை எடுத்து அங்கே நிகழுவதை தான் பணியாற்றிய பத்திரிக்கை வழியாக உலகுக்கு காட்சியாக்கிய கெவின் கார்ட்டர், 1993இல் உள்நாட்டுக் கலவரம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த சூடான் நாட்டின் தென்பகுதிக்கு சென்று எடுத்த ஒரு புகைப்படம், உலகெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளின் தொடர் விளைவே, பின்னாளில் கெவின் கார்ட்டரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது எனச் சொல்லலாம்.

தென் சூடானில், ஐக்கிய நாடுகள் அமைத்திருந்த உணவு முகாமை நோக்கி, குற்றுயிராய் தவழ்ந்து கொண்டிருந்த சிறுமியொருத்தியையும், அவள் இறப்பாளாவெனக் காத்திருந்த ஒரு வல்லூறு இரண்டையும் கண்ட கெவின் கார்ட்டர், காட்சியாக்கி, நிழற்படமாக்கிப் பின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்றார். போராட்டத்திலும், வறட்சியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்து, பட்டினியால் உயிரிழந்து கொண்டிருந்த பத்திரிக்கையில் படம் வெளிவந்த பின், மக்களிடையேயிருந்து வெளிவந்த தொடர் கேள்விகளும் எதிர்ப்புகளும், நியுயார்க் டைம்ஸை, படமெடுத்தபின் வல்லூறை கெவின் கார்ட்டர் துரத்திய பின்னே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாரெனவும், அந்தச் சிறுமி பிழைத்திருக்கலாமெனவும் பதிலளிக்க வைத்தது.

ப்ளோரிடாவைச் சார்ந்த 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க்' எனும் ஒரு பத்திரிக்கை இந்த படம் பற்றி பின்வருமாறு எழுதியது. 'அந்தச் சிறுமி வதைபடுவதை முழுமையாக படமெடுப்பதற்காக, கேமராவின் லென்ஸை சரிசெய்தவர், இன்னொரு உயிர்க்கொல்லி மிருகமே, அவ்விடத்திலான இன்னொரு வல்லூறே'

The St. Petersburg Times in Florida said this of Carter: "The man adjusting his lens to take just the right frame of her suffering, might just as well be a predator, another vulture on the scene."

இந்த படம் மட்டுமல்லாமல் இது போன்ற பல படங்களையும் எடுத்த கெவின் கார்ட்டர், அவரது படங்களுக்கான எதிர்வினைகளும், அவரது வாழ்வில் நடந்த சில மாற்றங்களு
ம், அவரைப் பின்னாளில் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. தற்கொலை செய்து கொள்ளும்போது, கெவின் கார்ட்டர் எழுதிய கடிதத்தின் ஒரு வரி -

வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note

கெவின் கார்ட்டர் மட்டுமல்ல, உண்மையில் நாமெல்லோருமே, நாளின் ஓரிரு கணங்களிலாவது அந்த வல்லூறாகவே இருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ அல்லது அறிய விரும்பாமலோ தனி உலகத்தில் தானெனும் சிந்தனையில், உலகின் நிகழ்வை, போக்கை, வலிகளை உணர மனம் தயாராயில்லாத நிலையில்தான் இருக்கிறோம்.

தொடர்புடைய இணைப்பு;-
http://en.wikipedia.org/wiki/Kevin_Carter