Saturday, November 29, 2008

'பௌத்தமும் தமிழும்' புத்தகம் தரும் வரலாறு!

புத்தரெனும் வரலாற்றுப் பெருமனிதரைக் கடவுளென்று கற்க ஆரம்பித்து, அவர் கடவுள் பற்றிப் பேச விரும்பாத முன்னோடிகளில் ஒருவரென அறிந்ததில் எனக்குப் பெரு வியப்பு. அற வழியொன்றே நல்வழியென்று அவர் கண்டாலும், கடவுளும் வழிபாடும் கூடாதென்று சொல்லியிருந்தாலும், நாட்போக்கில் அவரையே கடவுளாக்கினர். மேலும் அன்றிலும் இன்றிலும் அவர் பெயர் சொல்லிக்கொண்டே அறவழியென்றால் என்னவென்றே கேட்பவர் கண்டு மனம் மகிழ முடிவதில்லை.

பல காலமாய் என்னிடமிருந்த புத்தர் குறித்து புலவர்.தி.இராச கோபாலனார் தொகுத்த புத்தகத்திலிருந்து எழுத நினைத்திருந்தேன். அந்தப் புத்தகம் தற்போது கைவசம் இல்லையெனினும் அந்தப் புத்தகத்திற்கு மூலமாய் இருந்த
'பௌத்தமும் தமிழும்' என்ற தலைப்பில் தமிழாராயச்சியாளர் திரு.மயிலை.சீனி.வேங்கடசாமி எனபவரால் 1940-இல்
வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து சில தகவல் துளிகள்:-

முன்னுரையில் ஒரு பகுதி:
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த புத்தமதம், கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை உயர்நிலையிலிருந்து, கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் மறையத் துவங்கியது.

"வாசகர் இந்நூலில் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால் அதன் பொருட்டு
எம்மீது சீற்றம் கொள்ளாமல், அஃது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக் கொள்வாராக. எந்த மதத்தையோ குறை கூற வேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மையுணர வேண்டும் என்பதொன்றோ எம் கருத்து."

வரலாற்றில் புத்த மதம்:
பௌத்தம் தமிழ் நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன.... இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிற்கு வந்தன.

கி.பி.ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டிற்குப் பின்னர். பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைனமதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ..

பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது...

பௌத்தக் கோயில்கள் ஜைனக் கோயில்களாக மாற்றப்பட்டன. பௌத்த பிக்ஷுக்குகள் வசித்த மலைக் குகைகள், ஜைனக் குகைகளாக மாற்றப்பட்டன.

அகங்களர் என்னும் ஜைனர், கி.பி.எட்டாம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்க
ள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பிண்ணணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத் தொடங்கி ஜைன மதத்தை வீழ்த்தி உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான், பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

காஞ்சிபுரம் நகரும் புத்த மதமும்:

இந்த ஊர் தொன்று தொட்டுச் சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு
நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக் காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்னும் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். இவர் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த பள்ளிகளும், ஆயிரம் பௌத்த பிக்ஷுக்களும் இருந்ததாக கூறுகிறார்.

நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தரும பாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள்.

இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம், பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக் கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.

புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றது.

காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன. அவைகளில் ஆறடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட 'சாஸ்தா' ( இது புத்தர் உருவம் ) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை.

அய்யப்பனும் புத்த மதமும்:

இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும் 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்த கோயில்களாக இருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். 'சாத்தன்' என்பது 'சாஸ்தா' என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம் எனவே 'சாத்தன் காவு' என்றால் புத்தரது தோட்டமென்பது பொருள்.

இந்து மதத்தில் பௌத்த மதக் கொள்கைகள்:-
தமிழ் நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்துவிட்டபோதிலும் அதன் பெரிய கொள்கைகளில் பல நாளிதுவரையில் இந்து மதத்தில் நன்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டை திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன.
 ஆதிசங்கரின் அத்வைதக் கொள்கையும் 'பிரசன்ன பௌத்தம்' என்று அறியப்பட்டதே.  அந்தக் காலத்தில் நடைமுறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டு 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவு கூரற்பாலது.

தமிழ் வரலாற்றில் புத்த மதம்:

தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. மணிமேகலை, குண்டலகேசி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை.

வீரசோழியம், சித்தாந்தத்தொகை, திருப்பதிகம் மற்றும் விம்பசாரக் கதை ஆகிய நூற்கள் கிடைக்கப் பெறாவிடினும் அவை பற்றிய குறிப்புகள் மட்டும் உள்ளன.

புத்தகம் குறித்த அதிக தகவல்களுக்கு:- பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.  ( படித்ததில் பிடித்ததால் எழுதுவது தவிர்த்து எனக்கும் இந்த பதிப்பகத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)

3 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல்கள், இந்த நூலை சென்றவாரம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் பதிவும் அது குறித்தே வந்திருக்கிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

What a coincidence? I am just reading this book & thinking of writing a post on this !

நம்பி.பா. said...

நன்றி கோவி.கண்ணன் & அறிவன், எந்த விதமான சொந்தக் கண்ணோட்டத்தை அளிக்காமல் வெறுமனே அந்தப் புத்தகம் தெரிவித்த தகவல்களையே தர முயன்றிருக்கின்றேன். இன்னும் பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன, எல்லோருமே படிக்க வேண்டிய புத்தகம் இது.