Friday, April 17, 2009

பூக்களின் பாதையில் புன்னகைக்க மறந்த விழிகள்...

ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்
அழியாத விளக்கென்பதுவும் பொய்,
மாற்றமென்பதே ஒரே மெய்.

மாற்றத்தின் பாதையில்
ஏமாற்றத்தின் சுவடுதனை
மெல்ல நுழைக்கும்
பொய்யான வாக்குறுதிகள்
பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,

தேவைகளுக்கான
விளக்கங்களும் மாறி இருக்கும்.

மாற்றம் பொய்யிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.

அன்று பூக்களின் பாதையில்
புன்னகைக்க மறந்த விழிகள்
பொய்யாய்ப் போய்விடும்.

அலையடித்த கரையில் நிற்கும்
நுரைத்த மணலாடாத கால்கள்
பொய்யாய்ப் போய்விடும்.

மாற்றத்தின் தேவையையும்
உணர மறுக்கும்
ஏமாற்றச் சிந்தனைகளை
விலக்கக் கற்றுக் கொண்டால்
பிரிந்திருக்கும் மாடுகள் கூடக்கூடும்.
அவை கூடி நின்றால்
வாடிய வயிறுகளுக்கும் உணவு கிட்டும்;

ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையுமே
சிந்தனையில் ஏந்தி ஏந்தி
மழுங்கிய மூளைகளுக்குள்
முட்களும் மலரும்.
குனிந்த முதுகுகள் நிமிரும், நிமிர்ந்தால்
முட்டிய கட்டைகளும் முறிந்து போகும்;

அப்போது மாற்றம் விதியிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.
விதிப்பயனுக்கான
விளக்கமும் மாறி இருக்கும்.

ஏற்கனவே எழுதியது:-
விதியும் வாழ்வின் விதையும் - http://vaigaraivaanam.blogspot.com/2008/09/blog-post.html





2 comments:

Anonymous said...

test

Suresh said...

அருமையாய் எழுதுறிங்க

//அலையடித்த கரையில் நிற்கும்
நுரைத்த மணலாடாத கால்கள்
பொய்யாய்ப் போய்விடும்.//

//மாற்றத்தின் தேவையையும்
உணர மறுக்கும்
ஏமாற்றச் சிந்தனைகளை
விலக்கக் கற்றுக் கொண்டால்
பிரிந்திருக்கும் மாடுகள் கூடக்கூடும்.
அவை கூடி நின்றால்
வாடிய வயிறுகளுக்கும் உணவு கிட்டு//


நல்ல சிந்தனைகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள்