Thursday, April 17, 2008

சார்லஸ் டார்வினின் ஆய்வு எழுத்துக்கள் இணையத்தில்!



முழுப்பெயர்: சார்லஸ் ராபர்ட் டார்வின்
பிறப்பு: 12 பிப்ரவரி 1809
இறப்பு: 19 ஏப்ரல் 1882

டார்வின் ஆன்லைன் திட்டம் குறித்து
------------------------------------------------
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "டார்வின் ஆன்லைன்" திட்டத்தின் விளைவாக, டார்வின் அவர்கள் தனது வாழ்நாளில் அவரது ஆய்வுகளுக்காக எழுதிய 90,000 பக்க ஆய்வுக் கட்டுரைகள், குறிப்புக்கள், வரைபடங்கள் மற்றும் நிழற்படங்கள் தற்போது, அனைவரும் படித்துச் செல்லும் விதமாய் http://darwin-online.org.uk என்னும் இணையத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நூலகத்திலிருந்த டார்வினின் ஆய்வு எழுத்துக்களும் மற்றும் உலகமறிந்த "பரிணாமத் தத்துவம்" தொடர்பான அவரின் எழுத்துக்கள் அனைத்தும் உலகின் பார்வைக்காய் அந்த தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 40,000 பார்வையாளர்களை ஈர்ப்பதாகவும், இதுவரை இரண்டரைக் கோடி பார்வையாளர்கள் தளத்திற்கு வந்துள்ளதாகவும், டார்வின் ஆன்லைன் தளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

டார்வின் குறித்து: -
----------------------
மருத்துவத் துறையில் பயில எண்ணியிருந்த டார்வின், எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் "கிறித்துவ இறையியல்" படித்தார். இயற்கை ஆர்வலரான டார்வின், 1831ஆம் ஆண்டில் எச் எம் எஸ் பீகில் (HMS Beagle) என்னும் கப்பலில் உலகம் முழுவதும் சுற்றும் ஐந்தாண்டு கால ஆராய்ச்சிப் பயணம் துவங்குவது அறிந்து அந்தக் குழுவில் சேர்ந்தார்; பின்னாளில் டார்வினின் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கெல்லாம் அந்தப் பயணம் தந்த அறிவும், அதன் மூலம் தேடிக் கற்ற தெளிவும்தான் காரணம்.

ஏழு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்ற பைபிளின் வழியான ஐரோப்பியர்களின் நம்பிக்கையை, ஆராய்ச்சிப் பயணக் காலத்தில் படித்த முந்தைய கட்டுரைகளின் தெளிவாலும் தனக்குள்ளே கேள்விகளுக்கு உள்ளாக்கியிருந்தார் டார்வின். "லையல்" அவர்களின் "புவியியல் கொள்கைகள்" ( Lyell's Principles of Geology) என்னும் புத்தகத்தில் தெரிவித்திருந்த "பாறைகளில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள்(fossils), அந்த உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததற்கான சான்று" என்ற கருத்தும், டார்வினின் கடற் பயணத்தில் அவர் கண்ட பற்பல தீவுகளில் பார்த்த பல்வேறு வித உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்முறைகளும் அவரின் கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தன. தென் அமெரிக்காவினை அவரின் பயணம் நெருங்கியபோது, காலபாகஸ் (Galapagos) தீவில் கண்டெடுத்த சில ஆராய்ச்சிப் படிமங்களும் அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையளித்தன. இங்கிலாந்து திரும்பியபின், 1836ஆம் ஆண்டு, அவரின் ஆய்வு முடிவுகளை "பரிணாமத் தத்துவம் மற்றும் இயற்கை தெரிவு" என்ற வகையில் டார்வின் வெளியிட்டார்.

"பரிணாமத் தத்துவத்தின்" மீதாக மேலும் 20 ஆண்டுகள் உழைத்து பல தகவல்களை சேகரித்து, அவரைப் போல பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து ஒத்த கருத்தை கொண்டிருந்த "ஆல்பிரட் ரஸ்ஸ்ல் வாலஸ்" எனும் இன்னொரு இயற்கை ஆய்வாளருடன் கூட்டாக 1958ஆம் ஆண்டு "இயற்கைத் தெரிவின் விளைவான உயிர்களின் தோற்றம்" என்ற புத்தகத்தை டார்வின் வெளியிட்டார்.

டார்வினின் கொள்கைப்படி, மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்விலங்குகளிலிருந்து (குரங்கு) பரிணாம வளர்ச்சியின் மூலமாக தோன்றியவர்கள் என்பது, அதுநாள் வரை பைபிளின் வழியாய், கடவுள் மனிதனைப் படைத்த கருத்திற்கு முற்றிலும் எதிர்ப்பாகவும், பைபிளைக் கேள்வி கேட்பதாகவும் இருந்ததால், டார்வின் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, மனிதன் கடவுளால் நேரடியாகப் படைக்கப்படவில்லையெனும் டார்வினின் கருத்தை கிறித்துவ உலகம் ஏற்றுக்கொள்ளாமல் தான் உள்ளது. இருந்தாலும், அவரின் கொள்கை குறித்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அறிவியல் உலகில் பெரிதாய் ஏற்கப்பட்டது. இன்றைய மருத்துவ உலகின் பல கண்டுபிடிப்புக்கள் டார்வினின் கொள்கை மற்றும் அது குறித்த பிற்கால அறிவியல் அறிஞர்களின் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.


தொடர்புள்ள தொடுப்புக்கள்:
http://darwin-online.org.uk/
ta.wikipedia.org/wiki/சார்லஸ்_டார்வின்
http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
http://www.nilacharal.com/tamil/ariviyal/tamil_science_320.asp
http://www.guardian.co.uk/science/2008/apr/17/darwinbicentenary.evolution

2 comments:

Anonymous said...

Very useful information. Thanks Nambi.

நம்பி.பா. said...

நன்றி anonymous உங்களின் வருகைக்கு!