Thursday, February 12, 2009

மனிதன் கடவுளின் படைப்பெனும் பழங்கதையை அறிவியலால் மறுத்த சார்லஸ் டார்வின்!

இன்று பிப்ரவரி 12 2009, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இயற்கைத் தெரிவின் வழியான உயிர்களின் தோன்றுதலைப் பற்றி அறிவியல்
சார்ந்த ஆய்வுகளால் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வினின் 200-வது பிறந்த நாள். 1809இல் பிரிட்டனில் பிறந்த டார்வினின் முக்கிய ஆராய்ச்சி நூலான 'உயிரினங்களின் தோற்றம் - Origin of Species by Means of Natural Selection' வெளியிடப்பட்டதன் 150ஆவது ஆண்டு நிறைவும் இந்த ஆண்டு வருகிறது.

எல்லாம் வல்ல கடவுளாலோ, மேலே இருக்கும் வேறு எவராலோ உலகம் படைக்கப்பட்டது, உயிர்கள் ஆக்கப்பட்டது, மனிதன் உருவாக்கப்பட்டானென்ற காலம் காலமாய் கதையாய் கட்டி வந்திருந்த பழம் நம்பிக்கைகளை, வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களில் அறிஞர்கள் கேள்வி கேட்டு வந்திருந்தனர். கடவுளின் படைப்புதான்
மனிதனென்ற கருத்தை தர்க்க ரீதியாக முற்றிலும் மறுத்தும் பழித்தும் வந்திருந்தனர்.

ஆனால், உலகின் உயிர்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணாம வளர்ச்சியின் காரணமாகவும் உருவாகின, அவை இயற்கைத் தெரிவு என்னும் வாழ்வியல் தேவைகளால் வளர்ந்து வந்தன; அவ்வாறே, குரங்குகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுப் பரிணாம மாற்றங்களினாலே மனிதன் உருவானான் என்ற கருத்தை தனது பல ஆண்டு கால (கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால)
ஆழ்ந்த தொடர் ஆராய்ச்சிகளின் முடிவாக 1859-இல் உலகுக்குத் தெரிவித்தவரே டார்வின். இன்றைய அறிவியலின் முன்னோடியெனவும் சொல்லலாம்.

கடவுள் ஏழே நாட்களில் உலகத்தைப் படைத்தார், உலகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது, கடவுளே உலகின் ஒவ்வொரு உயிரின் வடிவத்தையும் படைத்தார், மற்றும் அந்த வடிவங்கள் மாறாதவையென்றே அறிவித்துவந்த பைபிள்களினை ஆதாரமாகக் கொண்ட கிறித்துவத் திருச்சபைகளின் கருத்துக்களுக்கு மாறாக, உலகம் பல்லாயிர ஆண்டுக் காலத்துக்கு முன்னரே உருவானது, மனிதனின் உருவாக்கம் பல உயிர்களின் வாழ்க்கை வழியாய் வந்த பரிணாமத்தின் மாற்றம் வளர்ச்சியென்று டார்வின் அறிவித்தது, இன்றிருக்கும் பல அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்னோடியாக இருக்கிறதென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

சொல்லப்போனால், 'பரிணாம வளர்ச்சியெனும் அறிவியல் கருத்து இல்லாமல், இன்றைய அறிவியல் என்பதே இல்லையெனலாம்!'. உதாரணமாக, எய்ட்ஸ் (AIDS) எனும் எச்ஐவி (HIV) கிருமியை தடுக்க ஒழிக்க உருவாக்கப்படும்
மருந்துகளை, அந்த கிருமிகள் தனது ஒரு வடிவத்திலிருந்து மறு வடிவத்துக்கு மிக வேகமாக பரிணாம வளர்ச்சியடைகிறதென்ற அடிப்படை அறிவு இல்லாமல் உருவாக்கவே முடிந்திருக்காது, உயிர்களைக் காக்கவும் முடிந்திருக்காது.

இன்றைய மேற்கத்திய நாடுகளில் கிறித்துவ மதப் பழமைவாதிகளின் முக்கிய எதிரியாக இருப்பவர் டார்வின்தான், அவரின் கருத்துக்கள், திருச்சபைகளின் பழமைவாதக் கருத்துக்களுக்கு பெரும் மாற்றுக் கருத்தாக இருக்கிறது. 'கிரியேஷனிஸம் - Creationism', 'சயன்டாலஜி - Scientology' போன்ற பழமைவாதக் குழுக்கள், டார்வினின் பரிணாமக் கொள்கையை எவ்வாறாகிலும், போலிக் கருத்தென்ற நிலைப்பாட்டை அதன் மீது உருவாக்கி அழித்திட வேண்டுமென்ற வெறுப்புடன் முயன்று கொண்டிருக்கின்றன.


முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், பரிணாமக் கொள்கையை மறுப்பதுடன், தான் மறுபடியும் கிறித்துவராகப் பிறந்தவரெனும் நம்பிக்கையும், தன்னுடன் இயேசு பேசுவதாகவும் தெரிவித்தவர். இவரது எட்டாண்டு ஆட்சிக் காலம், அமெரிக்காவின் அறிவியல் துறை சார்ந்த திட்டங்களுக்கு எந்த விதமான உதவியும் ஆதரவும் அளிக்காதது மட்டுமல்லாமல், அறிவியலாளருக்கும் பெரும் சோதனையான காலகட்டம்தான். மேலும் குடியரசுக் கட்சியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்ற சாரா பேலின் (Sarah Palin), கிட்டத்தட்ட அதே கருத்துக்களைக் கொண்டவர்தாம். டார்வினை மறுப்பது மட்டுமல்லாமல், கிறித்துவப் பழமைவாதத்தில் மறுபடியும் மூழ்குவதற்கான மதப் பழமைவாதிகள் இன்றைய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகார மட்டத்தில் பெருமளவில் இருக்கிறார்களென்பது முற்றிலும் உண்மை.

இந்தியாவில் சங் பரிவார் எவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும், சமுதாயக் கருத்துக்களில் பழமைவாதத்தைப் புகுத்த நினைக்கிறார்களோ, அதே விதமாகத் தான் இங்கே அமெரிக்காவில் கிறித்துவக் குழுக்கள் கிறித்துவப் பழமைவாதத்தைப் புகுத்த முழுதுமாய் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவின் பல மாநிலங்களில், பள்ளிகளில் பரிணாமக் கொள்கையை பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதே இல்லை. கிரியேஷனிஸம் எனும் பரிணாமத்தை மறுக்கும், பைபிள் வழி மனிதன் கடவுளினால் படைக்கப்பட்டது பற்றியே கற்றுத் தரப்படுகிறது. அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சார்ந்த லூஸியானா ஆளுநரான பாபி ஜிண்டால் ( இவர் இந்திய வழித் தோன்றல், பஞ்சாபிய குடும்பத்தவர், பள்ளிப்பருவத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்துவராக
மதம் மாறியவர்), கடந்த ஜூலை 2008இல் இயற்றிய சட்டத்தின்படி, லூஸியானா மாநிலப் பள்ளி வகுப்புகளில், பரிணாமக் கொள்கையை தவறெனக் கூறும் பாடங்களை பள்ளிப் புத்தகங்களிலும் பாடங்களிலும் வைக்கலாமென உத்தரவிட்டுள்ளார்.

மேலும் டெக்ஸாஸ் மாநிலத்தில், எல்லா பள்ளி ஆசிரியர்களும் பாடத்திட்டத்தின் பகுதியாக, பரிணாமக் கொள்கையை மறுத்துத் தாவரவியல் பாடங்களை நடத்த வேண்டுமென்பது குறித்து, டெக்ஸாஸ் கல்வி நிறுமத்திற்கும், அறிவியல் குழுவினருக்குமிடையே பெரும் வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பரிணாமக் கொள்கையை மறுப்பதே, கடவுள் மறுப்புக் கொள்கைகளினை எதிர்த்து அழிப்பதற்கான வழியென்று, பழமைவாதக் கிறித்துவச்சபைகளும், அது சார்ந்த குழுவினரும் நம்புவதே இவற்றிற்கெல்லாம் காரணம். இவர்களிடையே,
டார்வினும் அவரது கருத்துக்களும் முழு எதிர்ப்பையும் வெறுப்பையும் பெறுவதற்கு அவர்களின் பழமைவாத நம்பிக்கைகளே காரணம். இன்றைக்கு, இணையத்தில் டார்வின் பற்றிய தகவல்களைத் தேடினால், அவரின் பரிணாமக் கொள்கையை அறவே வெறுக்கும், அதே நேரத்தில், கிறித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் கருத்துக்களையும் ஒருங்கே காணலாம்.

கலிலியோ காலத்தில் அவரைச் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தியது
போல் டார்வினைக் கொடுமைப்படுத்தவில்லை என்றாலும், டார்வின் அவரின்
வாழ்காலத்திலேயே திருச்சபையினரால் பெரும் துயருக்குள்ளானவர்தாம். பிரிட்டனின் கிறித்துவத் திருச்சபை, அவரை நடத்திய விதம் குறித்தும், அவரின் பரிணாமக் கொள்கைகளை எதிர்த்ததையும், தவறெனத் தெரிவித்து அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு கிறித்துவப் பாதிரிமார் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்தப் பாதிரியாரின் கருத்தை அவரின் சொந்தக் கருத்தென்றும், டார்வினுக்காகவோ அவரை நடத்திய விதத்திற்காகவோ திருச்சபை மன்னிப்புக் கேட்கத் தேவையில்லையென்றும், திருச்சபையின் பேச்சாளர் உடன் கருத்துத் தெரிவித்திருந்தார். அன்று டார்வினின் அறிவியல் அணுகுமறையை எதிர்த்த கிறித்துவ பழமைவாதம், இன்றும் எதிர்த்துக் கொண்டுதானிருக்கிறது. அவரின் கொள்கைகளையும், அறிவியல் ஆராய்ச்சிக் கருத்துக்களையும் முழுதாய் மூடி மறைக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே, அறிவியலாளர்களும், சார்ந்தவர்களும், டார்வினின் 200ஆவது பிறந்த தினத்தை மிகவும் பெரிதளவில் கொண்டாடுகின்றனர்.

அறிவியலுக்கும், உயிர்களின் இயற்கை வாழ்வியலுக்குமான காரணங்களை தெளிவான ஆராய்ச்சிகளின் வழியாக உணர்த்திய டார்வின், உலகையும் மூட நம்பிக்கைகளையும், பழமைவாதக் கருத்துக்களையும் மீறி நடக்க வழியமைத்திருக்கிறாரென்றால் அது முற்றிலும் உண்மையே!!
அறிவியலால் இன்று முன்னேறும் உலகமே அதற்குச் சாட்சி!

டார்வினுக்கு நன்றி சொல்லுமுகமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

டார்வின் குறித்த எனது பழைய பதிவு: - இணையத்தில் டார்வினின் எழுத்துக்கள் -

சார்லஸ் டார்வினின் ஆய்வு எழுத்துக்கள் இணையத்தில்


மேலும் படிக்க:-

http://revcom.us/a/156/Darwin_Day-en.html

Church owes Darwin apology over evolution, says senior Anglican
http://www.guardian.co.uk/world/2008/sep/15/anglicanism.evolution

பார்க்க: பரிமாணம் குறித்த டார்வினின் அறிவுப் பயணம்.


Thursday, January 22, 2009

அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்?

முறம் கொண்டு எதிர் நின்ற
தமிழ் மறப் பெண்களின்
வழி வந்தோமென்ற
பழம் பெருமையில்
கால் வழுக்கி நிற்கின்றாயே
அய்யகோ தமிழா,
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பேசுவதோ சமத்துவம்
சுவாசமெல்லாம் பேராசை;
வளர்ப்பது தோட்டம்
வாழவைப்பதோ குடும்பம்
இவர்கள் விற்பது மட்டும் தமிழா?
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
இந்த வசனமே போதும் தேர்தல்களுக்கு!
கேள்வி கேட்க வரும் வாய்க்கோ
வாழையிலை விருந்தும்
இலைக்குக் கீழே ஓராயிரமோ ஈராயிரமோ!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பொறுப்பாய் தமிழா
வரும் தேர்தலுக்கு முந்தைய நாள்
பதவி துறப்போம்
வரும் அகதிகள் கணக்கையும்
முழுதாய் மறைப்போம்.
மகக் குளத்திலும் மஞ்சள் மகிமையிலும்
மக்களின் நலனையெல்லாம்
முழுக்குக் கொடுப்போம்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

ஈரமென்றால் கண்ணெண்போம்
ஈழமென்றால் என்னென்போம்
பதவி கிட்டுமாயின்
தமிழர்க்கு தலையென்பார்
தலைப்பாகைச் சுமைகளிவர்களை
தலையாலே சுமக்கின்றாய் நீ தலைமுறைகளாய்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

முறச் சீற்றம் மறந்து
அறச் சீற்றம் பேசுவாரிவர்
நாளை தேர்தலென்றால்
இன்று மட்டும்
அரிவாள் சீற்றம் கொள்வதோடு
தோளோடு தோள் நின்று
டாஸ்மார்க்கில் உள்ளதடா தமிழென்பார்
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!


பின்குறிப்பு:-
இன்று தமிழக அரசவையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால், இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தீர்மானத்தைப் பற்றிய தகவலைப் படித்ததின் உந்துதலே இந்தக் கவிதை. இது மட்டுமல்ல, இலங்கை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் மற்றும் மற்ற முக்கிய தமிழகத் தலைவர்களின் பொய்யான போக்குகளின் மிகுதியாலும் இந்தக் கவிதையெனலாம்.

புலிகள் மட்டுமே இலங்கைத் தமிழர்களல்ல, அப்பாவி மக்களின் நிலையைப் பற்றிப் பேசினாலே புலிகளைக் காப்பாற்றப் பேசுவதாகப் புரட்டித் திரிவதும், பயந்தும் பயமுறுத்தியும் பேச முயல்வதுவும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இவர்களினால் வெறுமனே உருவாக்கப்படுவது உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமேயன்றி வேறென்ன? இது கோமாளித்தனமேயன்றி வேறென்ன?

நடப்பது உள்நாட்டுப் போர் தான், சம உரிமைக்கான போராட்டம், பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லையென அமெரிக்கா வந்து சொன்னால் ஏற்பவர்கள் இவர்கள். மக்களின் நிலையிலும், நாடு கடந்து வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலையிலிருந்து எண்ணிப் பார்ப்போமே, இடையில் அகப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு பொது உலக நிறுவனங்களைக்கூட இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பதேன்? புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் மட்டும் தேவையானதல்ல உரிமையும் விடுதலையும், இலங்கையின் தமிழர்களுக்கும் தானே அது தேவை? புலிகள் மட்டுமே இலங்கை அரசிற்கு பிரச்சினை இல்லை, அதற்குப் பின்னால் காத்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சம உரிமைப் போராட்டத்திற்கான தீர்வைத் தரத் தயாராயில்லாத சிங்கள அரசின் பெரும்பான்மை மனப்பான்மை தான் முக்கியக் காரணம். அது மாறாதவரையில் உண்மைத் தீர்வு கிட்ட வழியில்லை!

தொடர்புடைய இணைப்பு;-
http://thatstamil.oneindia.in/news/2009/01/23/tn-assembly-to-issue-final-request-to-centre.html

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html



Sunday, November 30, 2008

புயல் நிஷா, மின்வெட்டுகள், பழுதான தொலைபேசி இணைப்பு மற்றும் நட்சத்திர வாரம்.

அவசர சொந்த வேலை காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் அமேரிக்காவிலிருந்து, சென்னைக்கு(திருவள்ளூர்) வர நேர்ந்தது. இங்கு புயல் நிஷாவின் வருகையால், கடந்த ஒரு வாரமாகவே எட்டிப் பார்க்கத் துவங்கிய மழை, சென்ற ஞாயிறன்று வலுக்கத் தொடங்கியது. மேலும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள சிற்றூர் என்பதால் எப்போதும் சிலமுறை எட்டிப் பார்த்திருந்த மின்வெட்டு தனது வரவையும் இருப்பின் நீளத்தையும் கூட்டத் துவங்கியது. அதுவரை நன்றாக வேலை செய்திருந்த வீட்டுத் தொலைபேசியும், இணைய இணைப்பும் சென்ற சனிக்கிழமை முதல் தகராறு செய்யவும் ஆரம்பித்தன.

நவம்பர் 24 முதல் 30 வரையிலான வாரம் தமிழ்மணம் நட்சத்திரப் பதிப்பிற்கான வாரமென்பது கொஞ்சம் தவிப்பையும் கூட்டியது. இது தவிர்த்து, நட்சத்திர வாரம் துவங்கும் திங்களன்று, 'சுடர்விழி' என்ற பதிவரின் பதிவு தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டதும் கேள்விகளைக் கூட்டியது. தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை மாற்றிய பிறகு அறிமுகப் பதிவையும் பிற பதிவுகளையும் பதிக்க ஆரம்பித்தேன். மாறிமாறி வந்த மின்வெட்டுக்களும், விட்டுவிட்டு வேலை செய்த தொலைபேசி இணைப்புக்கும் நடுவில் திங்களன்றும் செவ்வாயன்றும் பதிக்க முயன்றது இன்னமும் மறக்கவில்லை.

செவ்வாயன்று, மிகக் குறைந்த அளவு நேரமே வேலை செய்த இணைய இணைப்பு, புதனன்று காலையில் முழுதும் படுத்துவிட்டது. கரையைக் கடக்க நிஷா முயன்று கொண்டிருந்ததால் எங்கும் பெரு மழை. அந்த மழையிலும், எனது மாமாவை, அருகிலுள்ள தொலைதொடர்புத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி, பொறியாளரைத் தேடிப் பிடித்து வீட்டுக்கு வரவழைத்து, கம்பத்திலிருந்து வீட்டிற்கு வரும் இணைப்பைச் சரிசெய்யச் சொன்னது ஒரு பெரிய கதை.

எழுத எண்ணி எழுதாமல் விட்ட சில தலைப்புகள், நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்,
1) கிட்மோ (குவண்டனமோ) என்னும் கொடுஞ்சிறை
2) வீடற்றவர்களின் தலைநகரம் அல்லது லாஸ் ஏஞ்சலஸ் எனவும் சொல்லலாம்
3) FDA-வின் உணவுப் பிரமிடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
4) நீங்கள் உடற்பயிற்சியிடமிருந்து தப்பிக்க முடியாது

இந்த மின்வெட்டு மற்றும் தொலைபேசி இணைப்புப் பழுதுகள் எனக்கு இன்னொரு விதமாக உதவத் துவங்கியது. பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பிறகு, பேனாவைக் கையிலெடுத்து எழுதும் பழக்கத்தை மறுபடியும் தூண்டியது, கட்டாயமாக்கியது. கணிணியிலேயே எழுத்துப் பலகையைத் தட்டிக் கொண்டும் யோசித்துக் கொண்டுமிருந்ததை விட, வெறும் தாளில் எழுதுவதிலுள்ள வசதியை இந்த நிகழ்வுகள் எனக்குச் சுவைக்கத் தந்தன. நிற்க.

எப்போதாவது ஒரு முறை வலையில் பதிக்கும் என்னை, மேலும் மேலும் படிக்க, 
எழுதத் தூண்டியது இந்த நட்சத்திர வாரம். 

மேலும், என் எண்ணத்தில் உள்ளதை நான் எழுத்தில் பதிப்பித்ததை பதிவுகளுக்கு வந்து படித்த அனைவருக்கும், நட்சத்திர பதிவராய் வாய்ப்பளித்த தமிழ் மண நட்சத்திர பதிவுகள் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள். 
வணக்கம்.