Showing posts with label அரசியல் வானம். Show all posts
Showing posts with label அரசியல் வானம். Show all posts

Sunday, September 3, 2023

சனாதன தர்மமும் சமகால அதர்மமும் ஒழியட்டுமே!


சனாதனமென்றால் எல்லாக் காலமும்

தர்மம் என்றால் நெறிமுறை

எல்லாக் காலத்துக்குமான நெறிமுறை

எல்லாக் காலத்துக்குமான வாழ்முறை 


சனாதன தர்மம்

நான்மறையிலில்லா வார்த்தை 

சனாதன தர்மம்

சமஸ்கிருதத்துக்குச் சொந்தமில்லா வார்த்தை


புத்தன் பேசிய பாலி மொழி வார்த்தை

தம்மோ சனாதன

புத்தனுக்கு முன்னே அவனி்ன் நிலத்தில் 

பலரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை

தம்மோ சனாதன


காலத்தின் கடத்தலில்தம்மோ சனாதன

சனாதன தர்மமாகிறது

நெறி மாற்றப்பட்டு கருத்து மாற்றப்பட்டு

சமஸ்கிருதமும்இந்துமதமும்

சொந்தம் கொண்டாடும் வார்த்தையிது


புத்தன் நல்வாழ்வு வழி

அன்பு அறநெறி தாங்கியவன்

மனக்கடலின் அலைகளை வென்றவன்

வார்த்தைகளை உருவாக்கியவனல்லன்

மொழியைத் தாங்கியவனல்லன்


வாழ்க்கையை குழப்பத்தின் வழியிலிருந்தும்

கடுங்கட்டுப்பாட்டுப் பிடியிலிருந்தும் விலக்கி

எளிமையின் பாதைக்கும்

அமைதியின் பாதைக்கும் 

கொணர முயன்றவன் புத்தன்


உண்மை மற்றும் அன்பின் வழியையே

எக்காலத்திற்கான வாழ்நெறியெனும்

சனாதன தர்மமென்றான் புத்தன்


பின்னொரு காலத்தில்

சமஸ்கிருதம் அந்த வார்த்தையை வென்றது

அதன் பழம் பொருளைத் தின்றது

இன்றதைத் தாங்குவது

வெறும் அரசியல்வியாதிகள்தாம்


மனு தர்மம் நால்வர்ணம்

தூக்கிநிறுத்தும் வெறும்பேதம்

இன்றின் சனாதன தர்மம்

அழிந்து போகட்டும்

சமுதாயத்தை பிளந்துவைக்கும்

சனாதன தர்மம்

இன்றின் கேள்விகளுக்கு முன்

பொடிப்பொடியாகும்

பேதங்களே நீங்கள் போய்வாருங்கள்


கடவுளருக்கும் 

நம்பிக்கைகளுக்கும்

பிறழ் சனாதனம் தேவையில்லை

மண்ணின் மைந்தர்களை

சரிநிகர் சமானமென

கொண்டாடா சனாதனம் 

அழியட்டுமே ஒழியட்டுமே!


கதைகளுக்குத் தேவை

பொய்கள் 

திரை விலகியபின் அவையெதற்கு?

பொய்ச் சனாதன தர்மத்திற்கு

விடை கொடுப்போம்


 

Tuesday, April 7, 2009

நீதான் தலைவனே (அ) அழுகிய முட்டைகள் கலைக்க முயலும் கனவுகள்

நீதான் தலைவனென்றே
நால்வர் சொன்னர் என்னிடம்.

விழிகள் விரிந்தன
புருவங்கள் உயர்ந்தது
தலை கொஞ்சம் கனத்தது
இருந்தும்
கால்கள் வானில் பறந்தன.

என்னைச் சுற்றி
ஒளிவட்டம் தெரிகிறதாவென
எனக்கொரு சந்தேகமும் வந்தது.
யாரைக் கேட்பதென புரியவில்லை.

கூட்டமும் கூடியது என்னைச் சுற்றி
நால்வர் பதின்மராயினர் நூற்றுவராயினர்.

இரத்தத்தின் இரத்தங்களே
உடன்பிறப்புக்களேயென
உரத்து அழைக்கத் தயாரானேன்.

எங்கிருந்தோ வந்தென்
முகத்தை நனைத்தது ஓர்
அழுகிய முட்டை!
ம்ம்.. என் கனவு கலைந்தது!
விடியலின் வெளிச்சமும் முகத்திலடித்தது!

இருக்கட்டும் காத்திருக்கிறேன்
இன்றின் இரவுக்காய்.
அடுத்த தவணைக் கனவிலாவது
கூடும் கூட்டத்திற்கு லெக்பீஸூம்
என் தலைமைக்கு
ஒரு பெட்டியும் தயார் பண்ணப் பார்க்கிறேன்.


பின்குறிப்பு:-

சுப்பிரமணியம் சுவாமிக்கு விழுந்த முட்டையும், சிதம்பரத்திற்கு கிடைத்த செருப்பும் வேறல்ல. தொடர்ந்து அடக்கப்பட்ட சிந்தனைக்கு எதிரான சிந்தனை வெளிப்பாடுதான். கூட்டமாய் கூடியவர்கள் (தமிழக வழக்குரைஞர்கள்), கூட்டமாக இருந்தாலும் இன்னமும் பொது மக்களுடன் முழுதாய்ச் சேராது தனியாய்த் தான் இருக்கிறார்கள். இல்லையெனில், அவர்களை அடக்கிட தமிழக அரசும், காவல்துறையும் துணிந்திருக்க மாட்டார்கள். அழுகிய முட்டைகள் தயாராய்த்தான் இருக்கின்றன, ஆனால் இன்னமும் தமிழக மக்கள் தயாராகவில்லையெனத் தோன்றுகிறது.

தமிழகத்தின் தேவை, அழுகாச்சி சீரியல்களோ, சூப்பர் சிங்கரோ, ஐபிஎல்லோ, டாஸ்மாக்கோ அல்ல! அழுகிய முட்டைகளின் தொடல் படல்தான், பலரின் தவறான கனவுகளைக் கலைத்திட! கொஞ்சம் துணிச்சலும் தேவை தான்! துணிச்சலென்பது வன்முறைக்கான வெறி அல்ல, தவறுகள் கண்டு சிந்திப்பதுவும் கேள்விகள் கேட்பதுவும்தான்!

பிகு2:- அழுகிய முட்டைகள் இதில் வெறும் குறியீடுதான், உண்மையான தேவை மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் சமூகத்துக்கும் எது முக்கியத் தேவையென்ற சமுதாயச் சிந்தனை மாற்றம்தான்.

Thursday, March 5, 2009

எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

ஒரு சாத்தானின் ஆட்சியிலே
இன்னொரு சாத்தான் என்ன செய்யும்?
சாத்தானின் காலை
சாத்தான் வாரும் வித்தைதானே?

எந்தச் சாத்தானும் இதில்
ஓயப் போவதில்லை!


விடியல் முதல் படுக்கை வரை
பிழைப்புக்கு வாழ்ந்து தினம்
போராடும் மக்களோ
ஒரு சாத்தானுக்கு வாக்களித்துப் பின்
அடுத்த சாத்தானை நோக்கி!


சாத்தான்களின் வித்தைகளில்
சிந்தனை இழந்து நீ
தீக்குளிப்பது தமிழையெப்படி
வளர்க்கும்? எரித்துவிடாதா?
போராடத் துணிந்த மனம்
தீயிலெரிந்து போவது சரியா?

பகுத்தறிவை தூர எறிந்துவிட்டாயோ?

அரசுப் பணத்தை அள்ளியிறைப்பர்
தீக்குளிப்பவனை வீரனென்பர்
தெருத் தெருவாய் தமிழ் கூவி விற்பர்
இந்தச் சாத்தான்களின் தமிழ்த்தீ
மக்களைத்தான் எரிக்கும்!

சாத்தான்களில் பலவகை;
பகுத்தறிவை தூர எறிந்த நீ
தமிழகத்தை திரும்பப் பார்
நிச்சயம் நம்புவாய்!

தன் வீட்டைக் கோட்டையாக்கி
பணத் தோட்டமாக்கிப் பின்
ஊரான் பிணம் தின்னும் சாத்தான்கள் இவை!
இதில் எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

பின்குறிப்பு:- நாடொறும் நாடி முறை செய்யா - மு.க வும், ஜெவும், இவர்களைச் சூழ்ந்த மற்ற தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். நாடகக் களம் இதுவே, இவர்களுக்கு தேவை கிடைக்கப்போகும் வாக்குகள் மட்டுமே, பற்றியெரியும் உயிர்கள் பற்றிய சிந்தனையல்ல. தீக்குளிப்பது தவறு, தேவையில்லாததென மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் தெளிவும் இவர்களுக்கில்லை. தமிழையும் பகுத்தறிவையும் விற்று ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், அவை பற்றிய அறிவே இல்லாமல் வந்த ஜெவையும் தவிர இப்போதைக்கு வாக்களிக்க யாரும் இல்லையென்பது, தமிழக மக்களின் ஒரே வழியா இல்லை அறிவின்மையா? மக்கள் கூடிப் போராடினால் தான் மாற்றம் வரும், வெளியிலிருந்து வரப்போவதில்லை. இன்றைய இந்தச் சாத்தான்கள் வேறெங்கிருந்தும் வரவில்லை, நம்மிடமிருந்துதானே?

இப்போதைக்கு ஈழத் தமிழர்களின் நிலையிலும் பெரும் தேக்கமே. நிச்சயம் இந்தியத் தேர்தலும் அரசியல்வாதிகளின் வாக்குத் தேவையும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. தேவை, அமைதியும் மறு பேச்சுவார்த்தைகளும்தான். தன்னுரிமை இல்லாவிட்டாலும் சம உரிமை கிட்டினாலும் அமைதி உடன் நிச்சயம் திரும்பிவிடும். புலிகளின் போக்கிலும் நோக்கிலும் மாற்றம் தேவை, போராட்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு மட்டுமாய் அனைவரும் மட்டுப்படுத்தினால் தீர்வு நிச்சயம். சிங்களப் பேரதிகாரம் எவ்வளவு வலி தரும் உண்மையோ, தமிழ்ப் புலிகளின், மற்றைய தமிழ்க் குழுக்களின் உள்ளெதிர்ப்பு நிலைகளும் அவ்வளவு வலி தரும் உண்மையே! இரண்டுமே (ஈழத்) தமிழ் மக்களின் நலனுக்கு என்றும் முழுப்பகையாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்:-
சென்னை: சாத்தானான ஒரு பெண்மணியை (ஜெயலலிதா) தமிழகத்தை மேய விட்டுவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்று தான் யோசிக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் உஜாலா:- இலங்கை: ஜெ. உண்ணாவிரதம்-10ம் தேதி சென்னையில்..!

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html
அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்? - http://vaigaraivaanam.blogspot.com/2009/01/blog-post.html

Thursday, January 22, 2009

அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்?

முறம் கொண்டு எதிர் நின்ற
தமிழ் மறப் பெண்களின்
வழி வந்தோமென்ற
பழம் பெருமையில்
கால் வழுக்கி நிற்கின்றாயே
அய்யகோ தமிழா,
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பேசுவதோ சமத்துவம்
சுவாசமெல்லாம் பேராசை;
வளர்ப்பது தோட்டம்
வாழவைப்பதோ குடும்பம்
இவர்கள் விற்பது மட்டும் தமிழா?
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
இந்த வசனமே போதும் தேர்தல்களுக்கு!
கேள்வி கேட்க வரும் வாய்க்கோ
வாழையிலை விருந்தும்
இலைக்குக் கீழே ஓராயிரமோ ஈராயிரமோ!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பொறுப்பாய் தமிழா
வரும் தேர்தலுக்கு முந்தைய நாள்
பதவி துறப்போம்
வரும் அகதிகள் கணக்கையும்
முழுதாய் மறைப்போம்.
மகக் குளத்திலும் மஞ்சள் மகிமையிலும்
மக்களின் நலனையெல்லாம்
முழுக்குக் கொடுப்போம்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

ஈரமென்றால் கண்ணெண்போம்
ஈழமென்றால் என்னென்போம்
பதவி கிட்டுமாயின்
தமிழர்க்கு தலையென்பார்
தலைப்பாகைச் சுமைகளிவர்களை
தலையாலே சுமக்கின்றாய் நீ தலைமுறைகளாய்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

முறச் சீற்றம் மறந்து
அறச் சீற்றம் பேசுவாரிவர்
நாளை தேர்தலென்றால்
இன்று மட்டும்
அரிவாள் சீற்றம் கொள்வதோடு
தோளோடு தோள் நின்று
டாஸ்மார்க்கில் உள்ளதடா தமிழென்பார்
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!


பின்குறிப்பு:-
இன்று தமிழக அரசவையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால், இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தீர்மானத்தைப் பற்றிய தகவலைப் படித்ததின் உந்துதலே இந்தக் கவிதை. இது மட்டுமல்ல, இலங்கை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் மற்றும் மற்ற முக்கிய தமிழகத் தலைவர்களின் பொய்யான போக்குகளின் மிகுதியாலும் இந்தக் கவிதையெனலாம்.

புலிகள் மட்டுமே இலங்கைத் தமிழர்களல்ல, அப்பாவி மக்களின் நிலையைப் பற்றிப் பேசினாலே புலிகளைக் காப்பாற்றப் பேசுவதாகப் புரட்டித் திரிவதும், பயந்தும் பயமுறுத்தியும் பேச முயல்வதுவும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இவர்களினால் வெறுமனே உருவாக்கப்படுவது உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமேயன்றி வேறென்ன? இது கோமாளித்தனமேயன்றி வேறென்ன?

நடப்பது உள்நாட்டுப் போர் தான், சம உரிமைக்கான போராட்டம், பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லையென அமெரிக்கா வந்து சொன்னால் ஏற்பவர்கள் இவர்கள். மக்களின் நிலையிலும், நாடு கடந்து வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலையிலிருந்து எண்ணிப் பார்ப்போமே, இடையில் அகப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு பொது உலக நிறுவனங்களைக்கூட இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பதேன்? புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் மட்டும் தேவையானதல்ல உரிமையும் விடுதலையும், இலங்கையின் தமிழர்களுக்கும் தானே அது தேவை? புலிகள் மட்டுமே இலங்கை அரசிற்கு பிரச்சினை இல்லை, அதற்குப் பின்னால் காத்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சம உரிமைப் போராட்டத்திற்கான தீர்வைத் தரத் தயாராயில்லாத சிங்கள அரசின் பெரும்பான்மை மனப்பான்மை தான் முக்கியக் காரணம். அது மாறாதவரையில் உண்மைத் தீர்வு கிட்ட வழியில்லை!

தொடர்புடைய இணைப்பு;-
http://thatstamil.oneindia.in/news/2009/01/23/tn-assembly-to-issue-final-request-to-centre.html

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html



Sunday, March 23, 2008

இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்



பகத் சிங்
பிறப்பு:- செப்டம்பர் 27, 1907(லயல்புர், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)
இறப்பு:- மார்ச் 23, 1931 ( லாகூர் சிறையில் தூக்கில், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)

தூக்கிலடப்பட்டதன் காரணம்:- இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தது மற்றும், தில்லி நாடாளுமன்ற அவையில் ஒரு சிறு குண்டெறிந்துப் பின் காவலர்கள் கைது செய்யும்வரையில் பார்வையாளர் அரங்கிலேயே நின்றிருந்து, அவையில் நிறைவேற்றவிருந்த "இந்திய பாதுகாப்புச்" சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயன்றது.

இருபத்து நான்காம் வயதிலேயே தனது உயிரை நாட்டுக்காகவும் கொள்கைக்காகவும்
கொடுத்த பகத் சிங், இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் (HSRA Hindustan Socialist Republic Association) எனும், இரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் இந்தியாவில் ஏற்பட்டிருந்த புரட்சிக் குழுவின் தீவிர உறுப்பினர். வர்க்க பேதங்களையும், இறை நம்பிக்கை, சாதி மற்றும் அதன் தொடர்பான மூட நம்பிக்கைகளையும் அவர் முழுமையாய் எதிர்த்தார்.

21 வயதில் எடுக்கப்பட்ட பகத் சிங்கின் படம்:-


மார்ச் 23, 1931 அன்று காலை 7 மணியளவில்(சரியாக 77 ஆண்டுகளுக்கு முன்பு), பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூர் சிறையில், தோழர்கள் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய இருவருடனும் தூக்கிலிப்பட்ட பகத் சிங்,பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போரிலும் இந்திய வரலாற்றிலும் ஒரு முக்கியப் பக்கம், போராட்டம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

தனது கடைசி கடிதத்தில் பகத் சிங் எழுதியது, "போரிட்டுக் கொண்டிருக்கும்போது என்னைக் கைது செய்துள்ளனர், எனக்கு தூக்கு தேவையில்லை, பீரங்கியின் வாயில் வைத்து என்னைச் சிதறச் செய்யுங்கள்!", மரணத்திற்கு அஞ்சாமல் எழுதப்பட்ட வரிகள்!

கொள்கைப் பிடிப்பினை மாற்றிக் கொள்ளாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல் விடுதலையை வாழச் சொல்லிவிட்டு (இன்குலாப் ஜிந்தாபாத்) தன்னுயிரை தேச விடுதலைக்காக தந்த பகத் சிங்கின் வாழ்க்கை தலைமுறைகள் தாண்டியும் துணிவிற்கு உதாரணமாய் நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு;

பகத் சிங் சிறையிலிருந்தபோது எடுத்த படம்:-







பகத் சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்" - என்ற கடிதம் அவருடைய இறை மறுப்புக் கொள்கையை விளக்கிச் சொல்லும். மேலும், பகத் சிங்கின் நாட்குறிப்புப் புத்தகத்தில், மார்க்சியக் கொள்கை நம்பிக்கைகளும், இறை மறுப்பைப் பற்றிய குறிப்புக்களும் பெரிதும் இடம் பெற்றிருந்தன.

தூக்கிலிட்ட நேரத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டவாறே இறந்தவன் பகத் சிங்!

பகத் சிங்கின் தூக்கு குறித்த காந்தியின் வரிகளில்,
"பகத் சிங் வாழ விருப்பப்படவில்லை, (பிரிட்டிஷாரிடம்) மன்னிப்பு கோர மறுத்தும், வேண்டுகோள் விடக் கூடவும் தயாராக இல்லை. பகத் சிங் அறநெறியை பின்பற்றவில்லை, அதே நேரத்தில் வன்முறையை தழுவவும் தயாராகவில்லை!"

பகத் சிங்கின் மரணத்தை தடுக்கும் முயற்சியில் காந்தி தீவிரமாக ஈடுபடவில்லை என்ற கருத்து இன்றுவரை பெரிதாய் இருக்கிறது!

மார்ச் 29, 1931 குடியரசு வார இதழில், பெரியார் எழுதியது,

"பகத் சிங்கை தூக்கிலிட்ட நிகழ்வுக்கு வருந்தாதவர் எவருமில்லை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செயலை கண்டிக்காதவரும் எவருமில்லை"

"பகத் சிங்கின் சிந்தனையும் கொள்கைகளும் எந்த சட்டத்தின் நோக்கிலும் குற்றம் இல்லை, அப்படியே சட்டத்திற்கு எதிரானதெனக் கூறினாலும், அந்தக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் யாருக்கும் எந்த தீங்கையும், பொதுமக்களுக்கு எந்த விதமான இழப்பையும் ஏற்படுத்தாத பகத் சிங்கின் கொள்கையை செயலுக்கு கொணர நாம் உழைப்போம்!"



-----------------------------------------
பகத் சிங் குறித்து மேலும் விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh
பெரியார் கண்ணோட்டம்,இந்து நாளேட்டில் வந்திருந்த தலையங்கம்
http://www.hindu.com/2008/03/22/stories/2008032251531100.htm
பகத் சிங் மரணம் குறித்த காந்தியின் கடிதம்
http://www.kamat.com/mmgandhi/onbhagatsingh.htm
நான் ஏன் நாத்திகனானேன் - பகத் சிங்கின் கடிதம்
http://www.boloji.com/spirituality/051.htm
மேலும், http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm