Saturday, November 29, 2008

'பௌத்தமும் தமிழும்' புத்தகம் தரும் வரலாறு!

புத்தரெனும் வரலாற்றுப் பெருமனிதரைக் கடவுளென்று கற்க ஆரம்பித்து, அவர் கடவுள் பற்றிப் பேச விரும்பாத முன்னோடிகளில் ஒருவரென அறிந்ததில் எனக்குப் பெரு வியப்பு. அற வழியொன்றே நல்வழியென்று அவர் கண்டாலும், கடவுளும் வழிபாடும் கூடாதென்று சொல்லியிருந்தாலும், நாட்போக்கில் அவரையே கடவுளாக்கினர். மேலும் அன்றிலும் இன்றிலும் அவர் பெயர் சொல்லிக்கொண்டே அறவழியென்றால் என்னவென்றே கேட்பவர் கண்டு மனம் மகிழ முடிவதில்லை.

பல காலமாய் என்னிடமிருந்த புத்தர் குறித்து புலவர்.தி.இராச கோபாலனார் தொகுத்த புத்தகத்திலிருந்து எழுத நினைத்திருந்தேன். அந்தப் புத்தகம் தற்போது கைவசம் இல்லையெனினும் அந்தப் புத்தகத்திற்கு மூலமாய் இருந்த
'பௌத்தமும் தமிழும்' என்ற தலைப்பில் தமிழாராயச்சியாளர் திரு.மயிலை.சீனி.வேங்கடசாமி எனபவரால் 1940-இல்
வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து சில தகவல் துளிகள்:-

முன்னுரையில் ஒரு பகுதி:
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த புத்தமதம், கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை உயர்நிலையிலிருந்து, கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் மறையத் துவங்கியது.

"வாசகர் இந்நூலில் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால் அதன் பொருட்டு
எம்மீது சீற்றம் கொள்ளாமல், அஃது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக் கொள்வாராக. எந்த மதத்தையோ குறை கூற வேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மையுணர வேண்டும் என்பதொன்றோ எம் கருத்து."

வரலாற்றில் புத்த மதம்:
பௌத்தம் தமிழ் நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன.... இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிற்கு வந்தன.

கி.பி.ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டிற்குப் பின்னர். பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைனமதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ..

பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது...

பௌத்தக் கோயில்கள் ஜைனக் கோயில்களாக மாற்றப்பட்டன. பௌத்த பிக்ஷுக்குகள் வசித்த மலைக் குகைகள், ஜைனக் குகைகளாக மாற்றப்பட்டன.

அகங்களர் என்னும் ஜைனர், கி.பி.எட்டாம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்க
ள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பிண்ணணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத் தொடங்கி ஜைன மதத்தை வீழ்த்தி உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான், பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

காஞ்சிபுரம் நகரும் புத்த மதமும்:

இந்த ஊர் தொன்று தொட்டுச் சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு
நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக் காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்னும் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். இவர் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த பள்ளிகளும், ஆயிரம் பௌத்த பிக்ஷுக்களும் இருந்ததாக கூறுகிறார்.

நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தரும பாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள்.

இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம், பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக் கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.

புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றது.

காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன. அவைகளில் ஆறடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட 'சாஸ்தா' ( இது புத்தர் உருவம் ) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை.

அய்யப்பனும் புத்த மதமும்:

இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும் 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்த கோயில்களாக இருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். 'சாத்தன்' என்பது 'சாஸ்தா' என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம் எனவே 'சாத்தன் காவு' என்றால் புத்தரது தோட்டமென்பது பொருள்.

இந்து மதத்தில் பௌத்த மதக் கொள்கைகள்:-
தமிழ் நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்துவிட்டபோதிலும் அதன் பெரிய கொள்கைகளில் பல நாளிதுவரையில் இந்து மதத்தில் நன்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டை திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன.
 ஆதிசங்கரின் அத்வைதக் கொள்கையும் 'பிரசன்ன பௌத்தம்' என்று அறியப்பட்டதே.  அந்தக் காலத்தில் நடைமுறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டு 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவு கூரற்பாலது.

தமிழ் வரலாற்றில் புத்த மதம்:

தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. மணிமேகலை, குண்டலகேசி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை.

வீரசோழியம், சித்தாந்தத்தொகை, திருப்பதிகம் மற்றும் விம்பசாரக் கதை ஆகிய நூற்கள் கிடைக்கப் பெறாவிடினும் அவை பற்றிய குறிப்புகள் மட்டும் உள்ளன.

புத்தகம் குறித்த அதிக தகவல்களுக்கு:- பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.  ( படித்ததில் பிடித்ததால் எழுதுவது தவிர்த்து எனக்கும் இந்த பதிப்பகத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)

Friday, November 28, 2008

ஆலிஸ் மல்சனியர் வாக்கர் (Alice Malsenior Walker)

"ஒரு போராளியாய் வாழ்வதே இந்த பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கான வாடகை" -
"Being an activist is the rent we pay for being on the planet"
- ஆலிஸ் மல்சனியர் வாக்கர்


ஆலிஸ் மல்சனியா வாக்கர் - இவர் அமேரிக்கக் கறுப்பினப் பெண் எழுத்தாளர், கறுப்பினருக்கான சம உரிமை, பெண்களுக்கான சம உரிமை, சுற்றுப்பற நலன் மற்றும் அடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் இவர். இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய பல கவிதைப் புத்தகங்களையும், கதைகள், சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களை எழுதியவர், எழுதிக் கொண்டிருப்பவர்.

1982-இல் இவரெழுதிய 'தி கலர் பர்ப்பிள் (The Color Purple)' என்ற கதைப் புத்தகத்திற்கு, எழுத்துலகின் உயர் விருதான புலிட்சர் விருது (Pulitzer Prize) கிடைத்தது. அது படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது, நாடகமாக்கப்பட்டு இன்னமும் அமேரிக்க மேடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் அமேரிக்க புத்தக உலகில் அதிகம் பேசப்படுவரான இவரின் புத்தகங்கள் பெரிதும் விற்பனையாகின்றன.

1944 பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று அமேரிக்க ஜார்ஜியா மாநிலத்தில், கூலிக்கு பயிர்த்தொழில்
செய்துவந்த ஏழைக் கறுப்புக் குடும்பத்தில் எட்டாவதாகப் பிறந்த இவரின் வாழ்க்கையில் இவர் சந்தித்த போராட்டங்கள் அதிகம். எட்டு வயதில் வலது கண் பார்வையை இழந்த இவருக்குப் பின்னர் பதினாலு வயதில் அது சரிசெய்யப்பட்டும் முழுமையாகக் குணமாகவில்லை. பள்ளி வயதிலிருந்தே, கறுப்பர்களுக்கான சம உரிமை மற்றும் பெண்களுக்கான உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்ற ஆலிஸ், தனது எழுத்துக்களில் அந்த உரிமைப் போராட்டங்களை சுற்றியே எழுதினார்.


GRAY (
நரை) என்ற தலைப்பிட்டு இவரெழுதிய ஒரு கவிதையை தமிழாக்கி,
கருத்து கெடாமல் தர
முயன்றிருக்கிறேன், பிழையிருந்தால் மன்னிக்கவும்.
(இவர் குறித்து எழுத எண்ணி பல நாட்களுக்கு முன் துவங்கிய பதிவு இன்றுதான்
என்னால் முடிக்க முடிந்தது)

நரை

நரைக்கத் துவங்கியது
என் தோழியொருவளுக்கு.
நரை அவளின் முடிக்கு மட்டுமல்ல,
அது ஏனென்று தெரியவில்லை எனக்கு.

வைட்டமின் 'இ' குறைவா,
பி-12 தேவையா? அல்லது
சினங்கொண்ட வாழ்க்கையும்
தனிமையுமா?

யாரையேனும் நீ
நேசிக்க வேண்டுமென்றால்
எவ்வளவு நேரம் தேவையென்றேன்.
கண் சிமிட்டும் நேரமென்றாள்.

எவ்வளவு நாளைக்குப்
பிடித்திருக்குமென்றேன்,
'மிகப் பல மாதங்களுக்கு'
என்றாள் அவள்.

அவர்கள் உனக்குப்
பிடித்தவர்களாயிருப்பதை
மாற்றிக் கொள்ள
எவ்வளவு நாள் தேவைப்படுமென்று கேட்டேன்,
'மூன்று வாரங்கள்',
அதிகபட்சமென்றாள் அவள்.

நான் கேட்டேன்
எனக்கும் நரைக்கிறதென்று
உன்னிடம் சொன்னேனா?
நேசித்தல் பற்றி இதுபோல் எண்ணும்
அந்தப் பெண்ணை
நான் மயங்கி வியப்பதாலா?

(in her own words)
Gray

I have a friend
who is turning gray,
not just her hair,
and I do not know
why this is so.

Is it a lack of vitamin E
pantothenic acid, or B-12?
Or is it from being frantic
and alone?

'How long does it take you to love someone?'
I ask her.
'A hot second,' she replies.
'And how long do you love them?'
'Oh, anywhere up to several months.'
'And how long does it take you
to get over loving them?'
'Three weeks,' she said, 'tops.'

Did I mention I am also
turning gray?
It is because I *adore* this woman
who thinks of love
in this way.

----தொடர்புடைய சில இணைப்புக்கள்

Thursday, November 27, 2008

ஜார்ஜ் புஷ்ஷின் (இராக்) போர் மீது PBS காட்டிய வெளிச்சம்!

Public Broadcasting Corporation (PBS) எனும் அமேரிக்காவின் மக்கள் ஒளிபரப்பு நிறுவனம் பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பர். மக்களின் நன்கொடையாலும், பல தொண்டு நிறுவனங்களின் நிதி அளிப்பினாலும் மற்றும் பல தன்னார்வ ஊழியர்களின் பங்களிப்பாலும் வணிக நோக்கமின்றி மக்களுக்கு தகவல் தரும் நோக்கில் இது நடத்திவரப்படுகிறது. 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் அமேரிக்கத் தொலைக்காட்சிகளுக்காக பல பயன்தரத்தக்க நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது.


PBS குழந்தைகள் மற்றும் சிறார்களுக்காக கற்றலுக்காகவும் அவர்களின் பொழுதுபோக்கிற்காகவும் பல நிகழ்ச்சிகளையும், கார்ட்டூன் படங்களையும் அளித்துவருகிறது. செசாமே ஸ்ட்ரீட் ('Sesame Street') மற்றும் டெலிடப்பீஸ் ('Teletubbies' ) ஆகியன அனைவரும் அறிந்த நிகழ்ச்சிகள். இது தவிர, மற்ற வயதுப் பிரிவினர்களுக்கான நிகழ்ச்சிகளையும், மக்களின் அறிவுத் தேவைக்கான அறிவியல், பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகளினை விமர்சித்தும் PBS அளிக்கும் நிகழ்ச்சிகள் அமேரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமானவை. பெரிதாய் மக்களினுடைய பணத்தால் நடத்தப்பெறுவதனால், மற்ற வணிக ஊடகங்களால் அளிக்க இயலாத அரசு மற்றும் வணிக உலக நடவடிக்கைகளை விமர்சித்துவரும் நிகழ்ச்சிகளை PBSஆல் வழங்கமுடியும்.

கடந்த மார்ச் மாதத்தில் (2008), புஷ் தொடுத்த இராக் போர் குறித்தும், அது புஷ் மற்றும் டிக் சேனி குழுவினரால் அமேரிக்க மக்களின் மீது திணிக்கப்பட்ட விதம் குறித்தும், 'மைக்கேல் கிர்க்' (Micheal Kirk) எனும் PBSஇன் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட 'புஷ்ஷின் போர்' (Bushs War) என்ற விவரணப் படம் ஊடகங்களின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.


அமேரிக்கா மீது 9/11 தாக்குதல் நடப்பதற்கு முன்னரே, புஷ் மற்றும் டிக் சேனி குழுவினருக்கு இராக்கை தாக்குவதற்கான தேவைகளும், அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததையும் இந்த விவரணப்படம் காட்டுகிறது, இரண்டாயிரத்தில் புஷ் ஆட்சிக்கு வந்தது முதல் அதற்கான காய்களை டிக் சேனி நகர்த்தியதையும், அந்தப் போருக்கு முழு பின்புலமாக இருந்தது குறித்து, அதிகாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் இருந்தவர்களின் பேட்டிகள் மற்றும் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் மைக்கேல் கிர்க். இது தவிர புஷ் மற்றும் சேனியின் பேச்சுக்கள் மற்றும் பேட்டிகளும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

மைக்கேல் கிர்க் அவர்களிடம் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வழியாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:
கேள்வி: நீங்கள் ஏன் 'புஷ்ஷின் போர்' என்று பெயரிட்டுள்ளீர்கள்? அமேரிக்க மக்களவை ஒப்பதலளித்துத் தொடங்கப்பட்ட போரல்லவா இது? அரசியல் நோக்கத்துடனும் தனிமனிதர் ஒருவரை குறைகூறும் விதமாகவும் இது உள்ளதே. பொறுப்பான பத்திரிக்கையாளரின் குணமாக இல்லையே, நீங்கள் இன்னமும் தரமாக நடந்து கொண்டிருக்கலாமே?
மைக்கேல் கிர்க்: மன்னிக்கவும், அமேரிக்க பாதுகாப்புத் துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டு அவர்கள் கூறியபடி, "நூறு சதவிகித அதிகாரமானது, நூறு சதவிகிதப் பொறுப்பை அளிக்கிறது. இராக் போருக்கான எல்லா முக்கிய முடிவுகளும் அதிபர் (புஷ்) அவர்களாலேயே எடுக்கப்படுகிறதென நான் நம்புகிறேன். மேலும் இந்தத் தலைப்பு, ஜார்ஜ் புஷ் சமாளிக்க வேண்டியிருந்த காலின் பவெல், டிக் சேனி, ஜார்ஜ் டீனட், டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் கன்டலீசா ரைஸ் ஆகியோருக்கிடையான இன்னொரு போரையும் குறிக்குமென்று நம்புகிறேன்.

இந்தப் படம் 2000 முதல் 2007 வரையான காலகட்டத்தில் அமேரிக்க அரசு மற்றும்
அதிகாரத் தளங்களின் இராக் மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான நிகழ்வுகளையும், புஷ்ஷின் செயல்பாடுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஒரு புறம், வெளியுறவுத் துறை செயலர் காலின் பவெல், உளவுத்துறை இயக்குநர் ஜார்ஜ் டீனட் மற்றும் இன்னொரு புறம் துணை அதிபர் டிக் சேனி மற்றும் பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டுமாக, கொள்கை மற்றும் செயல்பாடுகளில் இரு வேறு நிலைப்பாடுகளுடன் ஒருவரையொருவர் எதிர்க்கத் துவங்கினர். இராக்கைத் தாக்குவது குறித்தும், சிறைப்பிடிக்கப்பட்டவர்களை நடத்தும்விதம் குறித்தும், ஐ.நா. சபையை அணுகுவது மற்றும் சதாம் உசேனுக்கும் 9/11 தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதென உளவுத்துறை அறிக்கை தயாரிப்பது குறித்துமாக முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களுடன் அவர்கள் இருந்தனர். ( புஷ்ஷின் 2004 தேர்தலுக்குப் பிறகு, பவெல், டீனட் மற்றும் ஆர்மிட்டேஜ் ஆகியோர் முழுதாய் வெளியேறி, சேனியின் குழுவினரே புஷ்ஷூடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).

புஷ்ஷின் முதல் நான்காண்டுகளில், வெளியுறவுத் துறை துணைச் செயலராக பதவியிலிருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், ஆட்சிக்குள் அதிகாரச் சண்டை வலுப் பெற்றபோது, தானும், காலின் பவெலும், அதிகாரத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பதிலிருந்து சேனி மற்றும் ரம்ஸ்பெல்டு ஆகியோரால் விலக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

PBS-இன் இணையத் தளத்தில் இந்த நான்கு மணி நேர விவரணப்படம் முழுமையாக காணக் கிடைக்கிறது. இணையம் வழியாக எளிதாக காணுமாறு, பத்து நிமிடப் பிரிவுகளாக உள்ளது. மேலும், நானூறுக்கும் மேற்பட்ட பேட்டிகளும், பல முக்கிய பேட்டிகள் எழுத்து வடிவிலும் இணையத் தளத்தில் கிடைக்கிறது.

தொடர்புடைய இணைய இணைப்புக்கள்: