பதின்மத்தின் இருப்பிலும்,
அதன் நிழலிலும் மனம் நின்றிருந்தபோதெல்லாம்
கரையில் காலைத் தொட்டுச் சென்ற
கடல் நீரலைகள் நெஞ்சை நனைக்கும்;
தோட்டத்தில் மரத்தை தழுவிச் சென்ற
மாலைக் காற்று மனதை நிறைக்கும்;
காத்திருப்பின் கணப்பொழுதில்
கடிகாரத்தின் நொடிமுள் நகராமல் நிற்கும்;
சூரியனின் தொடலுக்காய் காத்திருக்கும்
அடிவானம் மனதில் அழகிய கோலமிடும்;
காலத்தின் ஓட்டம் வயதைக் கூட்டும்,
சிந்தனையின் ஓட்டம் பாரத்தைக் கூட்டும்;
இப்போதெல்லாம்
காலைத் தொட்டுச் சென்ற அன்றின்
கடல் நீரலைகள் எங்கே போனதுவோ?
நொடிமுள் காணவில்லை
கடிகாரம் தேவைப்படுவதில்லை ஆனாலும்
வருடங்கள் வேகமாய் ஓடுகின்றன;
உதிப்பதுவும் மறைவதுவும்
சுவாசத்தைப்போல் சிந்தையில் நிற்பதில்லை!
கேள்விகளின் துவக்கம்
பதிலில் முடியாமல்
சிந்தனையில் பந்தடித்து
உறக்கத்தின் துவக்கத்தை தடுத்து நிறுத்தும்;
அறிதலிலும் கற்றலிலும்
அமைதி மட்டும் ஒளியாண்டுத் தொலைவில்!
ஆனாலும் அறிவு சுட்டுக்கொண்டேயிருக்கிறது!
பதின்மம் தாண்டிப் போனது உண்மை,
உண்மையும் அறிவும் தாண்டிப் போமா?
இங்கே கனவுகள் மட்டுமே சுகமாய் இலவசமாய்,
சிந்திக்காத நேரத்தில் வாழ்க்கையும் சுகமாய்;
----------------------
பதின்மம் - பதிமூன்று முதல் பத்தொன்பது வரையிலான விடலைப் பருவம் (Teen Age)
ஒளியாண்டுத் தொலைவு - ஒளியானது வெற்றிடத்தில் ஒரு நொடிப்பொழுதில் 299,792,458 மீட்டர் பயணம் செல்லும், ஒரு ஆண்டுக்காலத்தில் 9,460,730,472,580.800 கி.மீ. பயணம் செல்லும் (தொண்ணூற்றி நாலாயிரம் கோடியே சொச்சம் மைல்கள்), ஒப்பீட்டு அளவில் மிக மிக அதிக தூரம்.
----------------------
வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் - நிகழ்வுகளும் நேற்றுகளும் மாறி மாறிச் சிந்தனையில் வந்து செல்கின்றன; சிந்தனையாகவும் மாறிச் செல்கின்றன. நாளையை நேர் செய்ய நேற்றுகளையும் நிகழ்வுகளையும் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுகள் அது போன்று என்னுள் வரும் சில கேள்விகளின் பதிவுகளே!
Saturday, April 19, 2008
Thursday, April 17, 2008
சார்லஸ் டார்வினின் ஆய்வு எழுத்துக்கள் இணையத்தில்!

முழுப்பெயர்: சார்லஸ் ராபர்ட் டார்வின்
பிறப்பு: 12 பிப்ரவரி 1809
இறப்பு: 19 ஏப்ரல் 1882
டார்வின் ஆன்லைன் திட்டம் குறித்து
------------------------------------------------
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "டார்வின் ஆன்லைன்" திட்டத்தின் விளைவாக, டார்வின் அவர்கள் தனது வாழ்நாளில் அவரது ஆய்வுகளுக்காக எழுதிய 90,000 பக்க ஆய்வுக் கட்டுரைகள், குறிப்புக்கள், வரைபடங்கள் மற்றும் நிழற்படங்கள் தற்போது, அனைவரும் படித்துச் செல்லும் விதமாய் http://darwin-online.org.uk என்னும் இணையத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நூலகத்திலிருந்த டார்வினின் ஆய்வு எழுத்துக்களும் மற்றும் உலகமறிந்த "பரிணாமத் தத்துவம்" தொடர்பான அவரின் எழுத்துக்கள் அனைத்தும் உலகின் பார்வைக்காய் அந்த தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 40,000 பார்வையாளர்களை ஈர்ப்பதாகவும், இதுவரை இரண்டரைக் கோடி பார்வையாளர்கள் தளத்திற்கு வந்துள்ளதாகவும், டார்வின் ஆன்லைன் தளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
டார்வின் குறித்து: -
----------------------
மருத்துவத் துறையில் பயில எண்ணியிருந்த டார்வின், எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் "கிறித்துவ இறையியல்" படித்தார். இயற்கை ஆர்வலரான டார்வின், 1831ஆம் ஆண்டில் எச் எம் எஸ் பீகில் (HMS Beagle) என்னும் கப்பலில் உலகம் முழுவதும் சுற்றும் ஐந்தாண்டு கால ஆராய்ச்சிப் பயணம் துவங்குவது அறிந்து அந்தக் குழுவில் சேர்ந்தார்; பின்னாளில் டார்வினின் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கெல்லாம் அந்தப் பயணம் தந்த அறிவும், அதன் மூலம் தேடிக் கற்ற தெளிவும்தான் காரணம்.
ஏழு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்ற பைபிளின் வழியான ஐரோப்பியர்களின் நம்பிக்கையை, ஆராய்ச்சிப் பயணக் காலத்தில் படித்த முந்தைய கட்டுரைகளின் தெளிவாலும் தனக்குள்ளே கேள்விகளுக்கு உள்ளாக்கியிருந்தார் டார்வின். "லையல்" அவர்களின் "புவியியல் கொள்கைகள்" ( Lyell's Principles of Geology) என்னும் புத்தகத்தில் தெரிவித்திருந்த "பாறைகளில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள்(fossils), அந்த உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததற்கான சான்று" என்ற கருத்தும், டார்வினின் கடற் பயணத்தில் அவர் கண்ட பற்பல தீவுகளில் பார்த்த பல்வேறு வித உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்முறைகளும் அவரின் கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தன. தென் அமெரிக்காவினை அவரின் பயணம் நெருங்கியபோது, காலபாகஸ் (Galapagos) தீவில் கண்டெடுத்த சில ஆராய்ச்சிப் படிமங்களும் அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையளித்தன. இங்கிலாந்து திரும்பியபின், 1836ஆம் ஆண்டு, அவரின் ஆய்வு முடிவுகளை "பரிணாமத் தத்துவம் மற்றும் இயற்கை தெரிவு" என்ற வகையில் டார்வின் வெளியிட்டார்.
"பரிணாமத் தத்துவத்தின்" மீதாக மேலும் 20 ஆண்டுகள் உழைத்து பல தகவல்களை சேகரித்து, அவரைப் போல பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து ஒத்த கருத்தை கொண்டிருந்த "ஆல்பிரட் ரஸ்ஸ்ல் வாலஸ்" எனும் இன்னொரு இயற்கை ஆய்வாளருடன் கூட்டாக 1958ஆம் ஆண்டு "இயற்கைத் தெரிவின் விளைவான உயிர்களின் தோற்றம்" என்ற புத்தகத்தை டார்வின் வெளியிட்டார்.
டார்வினின் கொள்கைப்படி, மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்விலங்குகளிலிருந்து (குரங்கு) பரிணாம வளர்ச்சியின் மூலமாக தோன்றியவர்கள் என்பது, அதுநாள் வரை பைபிளின் வழியாய், கடவுள் மனிதனைப் படைத்த கருத்திற்கு முற்றிலும் எதிர்ப்பாகவும், பைபிளைக் கேள்வி கேட்பதாகவும் இருந்ததால், டார்வின் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, மனிதன் கடவுளால் நேரடியாகப் படைக்கப்படவில்லையெனும் டார்வினின் கருத்தை கிறித்துவ உலகம் ஏற்றுக்கொள்ளாமல் தான் உள்ளது. இருந்தாலும், அவரின் கொள்கை குறித்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அறிவியல் உலகில் பெரிதாய் ஏற்கப்பட்டது. இன்றைய மருத்துவ உலகின் பல கண்டுபிடிப்புக்கள் டார்வினின் கொள்கை மற்றும் அது குறித்த பிற்கால அறிவியல் அறிஞர்களின் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
தொடர்புள்ள தொடுப்புக்கள்:
http://darwin-online.org.uk/
ta.wikipedia.org/wiki/சார்லஸ்_டார்வின்
http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
http://www.nilacharal.com/tamil/ariviyal/tamil_science_320.asp
http://www.guardian.co.uk/science/2008/apr/17/darwinbicentenary.evolution
Sunday, March 23, 2008
இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்
பகத் சிங்
பிறப்பு:- செப்டம்பர் 27, 1907(லயல்புர், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)
இறப்பு:- மார்ச் 23, 1931 ( லாகூர் சிறையில் தூக்கில், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)
தூக்கிலடப்பட்டதன் காரணம்:- இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தது மற்றும், தில்லி நாடாளுமன்ற அவையில் ஒரு சிறு குண்டெறிந்துப் பின் காவலர்கள் கைது செய்யும்வரையில் பார்வையாளர் அரங்கிலேயே நின்றிருந்து, அவையில் நிறைவேற்றவிருந்த "இந்திய பாதுகாப்புச்" சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயன்றது.
இருபத்து நான்காம் வயதிலேயே தனது உயிரை நாட்டுக்காகவும் கொள்கைக்காகவும்
கொடுத்த பகத் சிங், இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் (HSRA Hindustan Socialist Republic Association) எனும், இரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் இந்தியாவில் ஏற்பட்டிருந்த புரட்சிக் குழுவின் தீவிர உறுப்பினர். வர்க்க பேதங்களையும், இறை நம்பிக்கை, சாதி மற்றும் அதன் தொடர்பான மூட நம்பிக்கைகளையும் அவர் முழுமையாய் எதிர்த்தார்.
21 வயதில் எடுக்கப்பட்ட பகத் சிங்கின் படம்:-

மார்ச் 23, 1931 அன்று காலை 7 மணியளவில்(சரியாக 77 ஆண்டுகளுக்கு முன்பு), பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூர் சிறையில், தோழர்கள் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய இருவருடனும் தூக்கிலிப்பட்ட பகத் சிங்,பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போரிலும் இந்திய வரலாற்றிலும் ஒரு முக்கியப் பக்கம், போராட்டம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டு!
தனது கடைசி கடிதத்தில் பகத் சிங் எழுதியது, "போரிட்டுக் கொண்டிருக்கும்போது என்னைக் கைது செய்துள்ளனர், எனக்கு தூக்கு தேவையில்லை, பீரங்கியின் வாயில் வைத்து என்னைச் சிதறச் செய்யுங்கள்!", மரணத்திற்கு அஞ்சாமல் எழுதப்பட்ட வரிகள்!
கொள்கைப் பிடிப்பினை மாற்றிக் கொள்ளாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல் விடுதலையை வாழச் சொல்லிவிட்டு (இன்குலாப் ஜிந்தாபாத்) தன்னுயிரை தேச விடுதலைக்காக தந்த பகத் சிங்கின் வாழ்க்கை தலைமுறைகள் தாண்டியும் துணிவிற்கு உதாரணமாய் நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு;
பகத் சிங் சிறையிலிருந்தபோது எடுத்த படம்:-

பகத் சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்" - என்ற கடிதம் அவருடைய இறை மறுப்புக் கொள்கையை விளக்கிச் சொல்லும். மேலும், பகத் சிங்கின் நாட்குறிப்புப் புத்தகத்தில், மார்க்சியக் கொள்கை நம்பிக்கைகளும், இறை மறுப்பைப் பற்றிய குறிப்புக்களும் பெரிதும் இடம் பெற்றிருந்தன.
தூக்கிலிட்ட நேரத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டவாறே இறந்தவன் பகத் சிங்!
பகத் சிங்கின் தூக்கு குறித்த காந்தியின் வரிகளில்,
"பகத் சிங் வாழ விருப்பப்படவில்லை, (பிரிட்டிஷாரிடம்) மன்னிப்பு கோர மறுத்தும், வேண்டுகோள் விடக் கூடவும் தயாராக இல்லை. பகத் சிங் அறநெறியை பின்பற்றவில்லை, அதே நேரத்தில் வன்முறையை தழுவவும் தயாராகவில்லை!"
பகத் சிங்கின் மரணத்தை தடுக்கும் முயற்சியில் காந்தி தீவிரமாக ஈடுபடவில்லை என்ற கருத்து இன்றுவரை பெரிதாய் இருக்கிறது!
மார்ச் 29, 1931 குடியரசு வார இதழில், பெரியார் எழுதியது,
"பகத் சிங்கை தூக்கிலிட்ட நிகழ்வுக்கு வருந்தாதவர் எவருமில்லை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செயலை கண்டிக்காதவரும் எவருமில்லை"
"பகத் சிங்கின் சிந்தனையும் கொள்கைகளும் எந்த சட்டத்தின் நோக்கிலும் குற்றம் இல்லை, அப்படியே சட்டத்திற்கு எதிரானதெனக் கூறினாலும், அந்தக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் யாருக்கும் எந்த தீங்கையும், பொதுமக்களுக்கு எந்த விதமான இழப்பையும் ஏற்படுத்தாத பகத் சிங்கின் கொள்கையை செயலுக்கு கொணர நாம் உழைப்போம்!"
-----------------------------------------
பகத் சிங் குறித்து மேலும் விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh
பெரியார் கண்ணோட்டம்,இந்து நாளேட்டில் வந்திருந்த தலையங்கம்
http://www.hindu.com/2008/03/22/stories/2008032251531100.htm
பகத் சிங் மரணம் குறித்த காந்தியின் கடிதம்
http://www.kamat.com/mmgandhi/onbhagatsingh.htm
நான் ஏன் நாத்திகனானேன் - பகத் சிங்கின் கடிதம்
http://www.boloji.com/spirituality/051.htm
மேலும், http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm
Subscribe to:
Posts (Atom)